ADDED : அக் 23, 2024 04:55 AM

நெய்க்காரப்பட்டி : பழநியில் வரதமாநதி அணை நிறைந்து வழியும் நிலையில் தற்போது குதிரை ஆறு அணையும் நிரம்பி வழிகின்றன.
பழநி சுற்றுப்பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பழநி பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சில மாதங்களாக தொடர்ந்து வரதமா நதி அணை நிரம்பி வழியும் நிலையில் நேற்று குதிரைஆறு அணை (80 அடி) நிரம்பியது . இதை தொடர்ந்து அணைக்கு வரும் நீர் நடுமதகில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் திண்டுக்கல் மாவட்டம் வழியாக திருப்பூர் மாவட்டம் கொழுமம் பகுதி அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதை தொடர்ந்து குதிரைஆறு அணை நீர் வெளியேறும்கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 53 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பாலாறு - பொருந்தலாறு அணைக்கும் வினாடிக்கு 509 கன அடி நீர்வரத்து உள்ளதால் விரைவில் இதுவும் நிறைய உள்ளது.