/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அபாய கட்டடத்தில் ஆய்வுக்கு காத்திருக்கும் நோயாளிகள்
/
அபாய கட்டடத்தில் ஆய்வுக்கு காத்திருக்கும் நோயாளிகள்
அபாய கட்டடத்தில் ஆய்வுக்கு காத்திருக்கும் நோயாளிகள்
அபாய கட்டடத்தில் ஆய்வுக்கு காத்திருக்கும் நோயாளிகள்
ADDED : டிச 17, 2024 04:24 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அரசு சமுதாய நல நிலையத்தில் உள்ள விபத்து அபாய கட்டடங்களில் ஆய்வகம், சிகிச்சை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
சின்னாளபட்டியில் 1972ல் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
தற்போது இதை சுற்றிலும் 6 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நோயாளிகள் வருகை அதிகரிப்பால் 5 ஏக்கரில் உள்ள இந்த வளாகம் அரசு சமுதாய நல நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
டாக்டர்கள், ஊழியர்களுக்கென 16 குடியிருப்புகள் கட்டப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன் 30 படுக்கை அறைகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்ரே வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
தினமும் 500க்கு மேற்பட்ட வெளி நோயாளிகள், அதிக எண்ணிக்கையிலான மகப்பேறு சிகிச்சை போன்றவற்றால் இப்பகுதியினர் பயனடைந்தனர். கட்டடங்கள் பராமரிப்பின்றி சேதமடைய சில பகுதிகள் மட்டும் அவ்வப்போது பெயரளவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆய்வகத்தின் உள்ளே பரிசோதனை செய்ய செல்லும்போது சேதமடைந்த கூரையால் அச்சத்துடன் பயனாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவின்படி 50 லட்சம் மதிப்பிலான நவீன வசதிகளின் கூடிய ஆய்வகம் ,அலுவலக கட்டடம் 2023 ஜனவரியில் பூமி பூஜையுடன் துவங்கியது.
3 மாதங்களுக்கு முன் பணிகள் முடிவடைந்தன. இருப்பினும் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அலட்சியம் நீடிக்கிறது.
அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதுடன் விபத்துக்கள் ஏற்படும் முன் ஆய்வக கட்டடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
தரம் உயர்த்தலாம்
எம்.ஆர்.திருநாவுக்கரசு, பா.ஜ., நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர், சின்னாளபட்டி:
நுாற்றுக்கணக்கான புற நோயாளிகள் வந்தபோதும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வெளி நோயாளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை போதிய அளவு பராமரிப்பது இல்லை.
பைபாஸ் ரோடு விபத்துகளால் பாதிப்படைந்தோர் சிகிச்சைக்காக திண்டுக்கல், மதுரை அனுப்பப்படும் நிலை உள்ளது. அவசர காலங்களில் உயிருக்கு போராடும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்படுகிறது.
பல லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை அரசு ஒதுக்கீடு செய்த போதும் இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகும் அவல நிலை தொடர்கிறது.
--விபத்து அபாயம்
குருசாமி, முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி: சேதமடைந்த பழைய கட்டடத்தில், நோயாளிகள் ரத்தம், ரத்த அழுத்தம், சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை உள்ளிட்டவற்றிற்காக காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது.
தற்போது குறுகிய இடத்தில் ஆய்வகம் இருப்பதால், வெகு நேரம் ஆய்வகம் முன்பு நின்று பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.
பழைய ஆய்வக கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து விழும் நிலையில் உள்ளன. பயனாளிகள் மேற்கூரை விழக்கூடிய அச்சமான சூழ்நிலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. வெளியிடங்களில் தனியார் ஆய்வகங்களுக்கு சென்று பல ஆயிரம் செலவு செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகின்றனர்.
--நோயாளிகள் அலைக்கழிப்பு
ஆர்.வனஜா, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர், செக்காபட்டி: பெரும்பாலும் அவசரகால சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் அளித்து திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர். 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதும், டாக்டர்களை மதியம் 12:00 மணிக்கு மேல் பார்க்க முடிவதில்லை.
சிகிச்சைக்கு வருவோரை ஏன் தாமதமாக வருகிறீர்கள் என கடிந்து கொள்ளும் புகார்கள் நீடிக்கிறது. அலட்சியம், அலைக்கழிப்பால் இங்கு வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கையும் சில ஆண்டுகளாக குறைந்துள்ளது. நெசவாளர்கள், ஏழை, கூலித்தொழிலாளிகள் தங்கி சிகிச்சை பெற ஏதுவாக கூடுதல் படுக்கை வசதிகள், ஊழியர்கள் இதே வளாக குடியிருப்புகளில் வசித்தல், விஷப்பூச்சிகள் நடமாட்டம் தவிர்க்கும் வகையில் வளாகத்தை பராமரிக்க வேண்டும்.