/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடை மழையை எதிர்பார்த்து உழவு பணி துவக்கம்
/
கோடை மழையை எதிர்பார்த்து உழவு பணி துவக்கம்
ADDED : மார் 08, 2024 01:50 AM
ரெட்டியார்சத்திரம்: வெயில் கடுமையாக அதிகரித்து வரும் சூழலில் விவசாயிகள் கோடை மழை எதிர்நோக்கி உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, சித்தையன்கோட்டை, ஆத்துார், எஸ்.பாறைப்பட்டி, சீவல்சரகு, வக்கம்பட்டி, வீரக்கல் பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை போதிய மழையின்றி குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. மக்காச்சோளம், சோளம், சுண்டல், வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்தனர். 2 ஆண்டுகளாக அவ்வப்போது பெய்த மழையால் பெரும்பாலான நீராதாரங்களில் ஓரளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இச்சூழலில் கடந்தாண்டை விட முன்னதாகவே கோடையின் கடுமை வெளிப்படத் துவங்கியுள்ளது.
சில நாட்களாக பகலில் கொளுத்தும் வெயிலால், விவசாயக் கிணறுகள் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது.
அதேவேளையில் கோடைமழை கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே நிலவுகிறது. பலர் வெங்காயம் சாகுபடி செய்ய ஆயத்தமாக இருந்தனர். தற்போது போதிய விலை கிடைக்காமல் சாகுபடி செய்த வெங்காயத்தை விவசாயிகள் சேமிக்க துவங்கி உள்ளனர்.
இதையடுத்து வெங்காய சாகுபடியை தவிர்த்து பருத்தி, மக்காச்சோளம் என சாகுபடியை மாற்ற தயாராகி வருகின்றனர். கோடை மழையை எதிர் நோக்கி இப்பகுதிகளில் உழவுப் பணி மும்முரமாக நடக்கிறது.

