/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேங்கி நிற்கும் சாக்கடையால் கொசுத்தொல்லை பாதிப்பில் திண்டுக்கல் 46 வது வார்டு மக்கள்
/
தேங்கி நிற்கும் சாக்கடையால் கொசுத்தொல்லை பாதிப்பில் திண்டுக்கல் 46 வது வார்டு மக்கள்
தேங்கி நிற்கும் சாக்கடையால் கொசுத்தொல்லை பாதிப்பில் திண்டுக்கல் 46 வது வார்டு மக்கள்
தேங்கி நிற்கும் சாக்கடையால் கொசுத்தொல்லை பாதிப்பில் திண்டுக்கல் 46 வது வார்டு மக்கள்
ADDED : பிப் 04, 2024 05:52 AM
திண்டுக்கல் : பல ஆண்டுகளாக சரியில்லாத ரோடு, தேங்கி நிற்கும் சாக்கடை, கொசுத்தொல்லை, தெருவிளக்குகள் இருந்தும் வெளிச்சமில்லை, காலி மனையிடங்களில் சூழ்ந்திருக்கும் செடி, கொடிகளால் விஷப்பூச்சிகள் தொல்லை என பல்வேறு பிரச்னைகளால் திண்டுக்கல் 46 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
சுண்ணாம்பு காளவாசல் நகரின் 5 தெருக்கள், புவனேஸ்வரி அம்மன் நகர், ராமர் பிள்ளை சந்து, பாரதிபுரத்தின் சில பகுதிகள் என பல்வேறு தெருக்களை கொண்ட இந்த வார்டில் பிரதான பிரச்னையாக சாக்கடைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் தான். நீர் செல்லாமல் அப்படி நிற்பதால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. ரோடுகள் மேடு பள்ளமாக இருப்பதாலும், மழைநீர் வடிகால்கள் சரியாக இல்லாததாலும் சிறுமழை பெய்தால் கூட மழைநீர் தேங்கி குளம் போல் இப்பகுதிகள் காட்சியளிக்கின்றன.
கொசுத்தொல்லை இப்பகுதியில் அதிகம் இருப்பதாகவும் கொசு மருந்து அடிக்கக்கோரி பலமுறை அறிவுறுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் இந்த வார்டு பகுதி காலி மனையிடங்கள், அப்படியே விடப்பட்ட இடங்கள் போன்றவை உள்ளன. இவற்றில் செடி, கொடிகள் காடு போல் வளர்ந்து, விஷப் பூச்சிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடனே மக்கள் சென்று வருகின்றனர்.
இங்குள்ள தெரு விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. விளக்குகள் இருந்தும் பயனில்லாத சூழல்தான் நிலவுகிறது. குப்பையை முறையாக துாய்மை பணியாளர்கள் அள்ளுவதில்லை என்ற குற்றசாட்டையும் மக்கள் கூறுகின்றனர்.
வெளியே செல்ல அச்சம்
வனஜா, சுண்ணாம்பு காளவாசல் நகர் : மாலை நேரத்திற்கு மேல் வெளியே வர அச்சமாக உள்ளது. விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். தெரு விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. கூடுதல் விளக்குகள் ,அதிக வெளிச்சம் தரக்கூடிய பல்புகளை மாற்றியமைக்க வேண்டும். ரோடுகள்மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். குடிநீரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வருகிறது.
சுகாதாரமற்ற சூழல்
ரவி, ராமர் பிள்ளை சந்து : சாக்கடைகள் பெயரளவில் உள்ளன. கழிவுநீர் தேங்கியே நிற்கின்றன. நோய்தொற்று எளிதில் உருவாகிறது. மழைநீர் வடிகால்கள் முறையாக இல்லாததால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கிவிடுகிறது. குப்பைத் தொட்டிகள் போதிய அளவிற்கு இல்லை. துாய்மை பணியும் சரி வர செய்வதில்லை. இதனால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடுகளை சரிசெய்யுங்க
ஹரிஷ், புவனேஸ்வரி நகர் : தெருக்கள் எங்கிலும் ரோடுகள் சரியில்லை. அவ்வப்போது குழாய் பதிப்பிற்காக குழாய்கள் தோண்டப்படுகின்றன. அதன்பின் ரோடுகளை நாங்களே சரி செய்ய வேண்டியதாக இருக்கிறது.
எந்த தெருவிக்கு சென்றாலும் வாகனங்கள் படாத பாடு படுகிறது. சிறிய தெரு என்று பாராமல் ரோடுகளை போட வேண்டும். சிசிடிவி க்கள் கூட குடியிருப்போர் சங்கம் சார்பில் தான் வைத்துள்ளோம். போலீஸாரின் ரோந்தை இந்தப்பகுதியில் அதிகப்படுத்தவேண்டும். தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது.
விரைவில் சரி செய்யப்படும்
ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷ்னர் : கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை சாக்கடைகள் துார்வாரப்பட்டு இதர குறைகளும் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.