/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
16 இடங்களில் ரோடு, ரயில் மறியல்; 1520 பேர் கைது
/
16 இடங்களில் ரோடு, ரயில் மறியல்; 1520 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2025 03:12 AM

திண்டுக்கல்: தொழிற்சங்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தை  தொடர்ந்து  திண்டுக்கல் மாவட்டத்தில்  16  இடங்களில் நடந்த   ரோடு, ரயில்  மறியலில் ஈடுபட்ட   1520 பேர்  கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, வேலை வாய்ப்பை உருவாக்குதல்  உட்பட  17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி.,  சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி.,  உட்பட 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் அருகே  மணிக்கூண்டிலிருந்து ஊர்வலமாக  வந்து பாரத் ஸ்டேட் வங்கி முன்பாக  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    தொ.மு.ச.,  அழகர்சாமி தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யு., கணேசன்,  ஜெயசீலன்,  தவக்குமார், எல்.பி.எப் .,நாட்ராயன், ஐ.என்.டி.யு.சி., உமாராணி, ஏ.ஐ.டி.யு.சி. துரை சந்திரமோகன், பாலன், மணிகண்டன், கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.  இதில்  250 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரயில் மறியல்
காலை 11:30 மணிக்கு திண்டுக்கல் வழியாக செங்கோட்டை - ஈரோடு    ரயிலை மறித்து   போராட்டத்தில் ஈடுபட முயன்ற தொழிற்சங்கத்தினரை    ரயில் ஸ்டேஷனில்  நுழைய விடாமல் போலீசார் தடுத்தும்   அதை  மீறி முதல்   ரயிலை நோக்கி சென்றனர்.
அப்போது  ரயில்  புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டது. ஆனால்  வேகமாக ஓடி சென்று ரயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் தலைமையில் சி.பி.எம்., பிரபாகரன்,  அரபுமுகமது,  சரத்குமார், வாலிபர் சங்கம் முகேஷ், மாதர் சங்கம் பாக்கியம், மாற்றுத்திறனாளிகள் சங்கம்  ஜெயந்தி, சாலையோர வியாபாரிகள் சங்கம்   ஜானகி, விவசாயத் தொழிலாளர் சங்கம்  அம்மையப்பன், விவசாயிகள் சங்கம் ராஜேந்திரன்  உட்பட  107 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜிலியம்பாறை
வேடசந்துார்:  வேடசந்துாரில்   பெரியசாமி,  நாகவேல் தலைமை வகித்தனர். பாலச்சந்திர போஸ்,   திருமலைசாமி  பேசினர்.
ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட  97 பேர் கைது செய்யப்பட்டனர்.  குஜிலியம்பாறையில் விவசாயிகள் சங்கம்தங்கவேல், கட்டுமான  சங்கம்  பாலசுப்பிரமணி, வாலிபர்சங்கம்  சண்முகவேல், மாதர் சங்கம்  பாக்கியம்,மார்க்சிஸ்ட் ஜெயபால், விவசாயிகள் சங்கம்  ராஜரத்தினம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  முத்துச்சாமி உட்பட  75 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாக்டோ ஜியோ
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தொழிற்சங்கம் போராட்டம் ஆதரவாக  ஜாக்டோ ஜியோ சார்பில்  திண்டுக்கல்  ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமை வகித்தார் வருவாய்த்துறை  செயலாளர் சுகந்தி,  ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முருகேசன்,   ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டரிக் ரெய்மாண்ட், வின்சென்ட் பால்ராஜ்  கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள் பலர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றத்தால்   அரசு அலுவலகங்கள் பல குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன.
பஸ் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. கடைகள், வணிக வளாகங்கள் எப்போதும் போல் திறந்திருந்தன. ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
1520 பேர் கைது
வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறியல்  நடந்தது. அதன்படி திண்டுக்கல்லில் 2,  சாணார்பட்டியில் 3, பழநி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், நத்தம், கன்னிவாடி, வத்தலகுண்டு, வடமதுரை, கீரனுார்,  குஜிலியம்பாறை, வேடசந்துார், சின்னாளபட்டி என மாவட்டம் முழுவதும்  16 இடங்களில் நடந்த மறியல் போராட்டங்களில் 1520 பேர் கைது செய்யப்பட்டனர்.

