/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆண்டுகள் கடந்தும் சீரமைக்காத ரோடுகள்; ஆக்கிரமிப்பால் அவதி பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்
/
ஆண்டுகள் கடந்தும் சீரமைக்காத ரோடுகள்; ஆக்கிரமிப்பால் அவதி பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்
ஆண்டுகள் கடந்தும் சீரமைக்காத ரோடுகள்; ஆக்கிரமிப்பால் அவதி பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்
ஆண்டுகள் கடந்தும் சீரமைக்காத ரோடுகள்; ஆக்கிரமிப்பால் அவதி பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்
ADDED : செப் 25, 2024 06:29 AM

திண்டுக்கல் ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாத ரோடுகள்,வடிகால் இருந்தும் ரோடுகளில் தேங்கும் கழிவுநீர்,எப்போதும் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனை,மழை நேரங்களில் ரோட்டில் ஆறுபோல் ஓடும் மழைநீர்,சகதியில் தடுமாறும் வாகன ஓட்டிகள், டெங்கு காய்ச்சலை உற்பத்தியாக்கும் கொசுக்கள்,ஆக்கிரமிப்புகள் என ஏராளமான பிரச்னைகளுடன் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர் பரிதவிக்கின்றனர்.
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சரவணன்,பொருளாளர் பழனிசாமி,செயலாளர் கார்த்திகேய பெருமாள்,நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டீபன்,பெருமாள்,சேக்முகமது,ரெங்கராஜ் கூறியதாவது: 1 முதல் 5 தெருக்களை கொண்ட இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ரோடுகள் சீரமைக்கபடாமல் சேதமாக கிடக்கிறது. வடிகால் இருந்தும் எந்த பலனும் இல்லாமல் கழிவுநீர் ரோட்டோரங்களில் தேங்கி நிற்கிறது. 2 தெரு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை உற்பத்தியாக்குகிறது. பல ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
எங்கும் ஆக்கிரமிப்பு
வடிகால் அமைத்தவர்கள் தாழ்வாக அமைத்ததால் இப்பிரச்னை தொடர்கிறது. இதுஒருபுறம் இருக்க தெருக்களில் எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்புகளாக உள்ளது. செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் இங்கு நடக்கும் பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல் மவுனமாக உள்ளனர். எத்தனையோ அதிகாரிகளுக்கு இங்கிருக்கும் பிரச்னை குறித்து புகார் கொடுத்துள்ளோம். இருந்தபோதிலும் நடவடிக்கை எடுத்தபாடில்லை.
மழைநீர் மாதக்கணக்கில் தேங்கி சகதியாக மாறி அவ்வழியில் வரும் பொது மக்கள் தடுமாறுகின்றனர். எண்ண முடியாத அளவிற்கு தெரு நாய்கள் சுற்றித்திரிந்து அடிக்கடி மக்களை கடிக்கின்றன. இவைகள் இரவில் துரத்துவதால் பெண்கள் அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்குகின்றனர்.
இரவு நேரங்களில் இருள்
பல பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. துாய்மை பணியாளர்கள் எப்போதாவது வருகின்றனர். தொடர்ந்து வருவதில்லை. இரவில் மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் வெளியில் வரமுடியாத அளவிற்கு கொசுக்கள் மக்களை கடித்து துன்புறுத்துகின்றன. தெரு விளக்குகள் முறையாக அமைக்காததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து உள்ளது. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. 2 தெரு நுழைவு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை எப்போதும் நடக்கிறது. போலீசார் இதை கண்டு கொள்வதே இல்லை. இதனால் பெண்கள் நடந்து வர முடியாமல் தவிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் எங்கள் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.