/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பை கொட்டப்படுவதால் மாசடையும் சடையன்குளம்
/
குப்பை கொட்டப்படுவதால் மாசடையும் சடையன்குளம்
ADDED : பிப் 21, 2026 06:59 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளம் கண்மாயில் குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டப்படுவதாலும் கழிவுநீர் கலப்பதாலும் மாசடைந்து வருகிறது. கண்மாயை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தங்கச்சியம்மாபட்டி, காப்பிலியபட்டி ஊராட்சிகளில் அமைந்துள்ளது சடையன்குளம். ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ள இக்குளம் 2018 ல் பல தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் எல்லைகள் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
குளத்திற்கு தண்ணீர் கொண்டு சேர்க்கும் கால்வாயை துார்வாரி சுத்தம் செய்ததால் அடுத்து பெய்த மழை நீர் குளத்திற்கு சென்றடைந்தது. இதற்கு முன்னர் பரப்பலாறு அணை தண்ணீர் தான் குளத்திற்கு வந்தது. தன்னார்வல அமைப்புகள், பொதுமக்கள் உதவியுடன் குளக்கரைகளில் பனைவிதைகள் நடப்பட்டு மரங்களாக மாறி வருகிறது. தற்போது இந்த குளத்தில் 50க்கும் மேற்பட்ட போர்வெல்கள் பயன்பாட்டில் உள்ளது.
இதன் மூலம் 25க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் கிடைத்து வருகிறது. தற்போது இங்கு குப்பை கழிவுகள் கொட்டப்படுவதுடன் கழிவுநீரும் கலப்பதால் கிராம மக்களுக்கு துாய்மையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இனிவரும் ஆண்டுகளில் குளத்தில் இருந்து துாய்மையான குடிநீர் கிடைக்காமல் மாசடைந்த தண்ணீர்தான் கிடைக்கும். இக் குளத்தை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குளத்தில் தண்ணீர் வற்றிய காலத்திலும் கூட சுற்றிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. குளத்தை தொடர்ந்து மாசுபடுத்தினால் இப்பகுதியில் வேளாண் தொழில் செய்வது என்பது இயலாமல் போய்விடும்.
குப்பையால் பாதிப்பு குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர், விழுதுகள் அமைப்பு: நீர்நிலைகளில் குப்பை கொட்டக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதற்கு மாறாக சடையன்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் குளம் மாசடைவதுடன் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. குப்பை கொட்டுவதை நிறுத்தி கண்மாயை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பனை மரங்கள் இருப்பது கரைகளுக்கு பலமாக இருக்கும். ஆனால் கரைகளில் முளைத்துள்ள சீமை கருவேல மரங்கள் பனை மரங்களை வளர விடாமல் தடுக்கிறது. நீர் வரத்து கால்வாய்களை மூடி செடி கொடிகளை அகற்ற வேண்டும்.
சுகாதார குடிநீர் கிடைக்காது வஞ்சி முத்து, சடையன் குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர், தங்கச்சியம்மாபட்டி: கழிவுநீர் கலக்காமல் இருந்த இந்தக் குளத்தில் தற்போது கழிவுநீர் விடப்படுகிறது. இவ்வாறு விடப்படும் கழிவு நீர் நிலத்தடியில் சென்று குடிநீரை மாசடைய செய்கிறது.
நாளடைவில் குளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி அசுத்தமான நீராக மாறி விடும். இதனால் குளத்தில் இருந்து குடிநீர் எடுத்து வரும் 25 கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பது அரிதாகிவிடும். இதோடு சிறிது சிறிதாக குப்பை, கழிவுநீர் குளத்தில் சேர்க்கப்பட்டு குளத்து நீரை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்று விடும்.

