/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் புறநகர் பஸ்கள்; அலைக்கழிப்பால் அவதிக்குள்ளாகும் பயணிகள்
/
பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் புறநகர் பஸ்கள்; அலைக்கழிப்பால் அவதிக்குள்ளாகும் பயணிகள்
பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் புறநகர் பஸ்கள்; அலைக்கழிப்பால் அவதிக்குள்ளாகும் பயணிகள்
பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் புறநகர் பஸ்கள்; அலைக்கழிப்பால் அவதிக்குள்ளாகும் பயணிகள்
ADDED : மார் 13, 2024 06:20 AM

கன்னிவாடி : கன்னிவாடியில் 5.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நவீன பஸ் ஸ்டாண்டை புறநகர் பஸ்கள் புறக்கணிப்பதால் பயணிகள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
கன்னிவாடி வழியே காமலாபுரம் -ஒட்டன்சத்திரம் ரோட்டில் தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இப்பகுதியினரின் போக்குவரத்து வசதிக்காக 40 ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் கோரிக்கையும் நீடித்தது. அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்குறுதிப்படி கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.9 கோடி ரூபாய் மதிப்பில் நவீன பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
இப்பகுதிக்கான பராமரிப்பு பொறுப்புகள் கன்னிவாடி பேரூராட்சி வசம் தற்போது ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இங்கு 30க்கு மேற்பட்ட கடைகள், பயணிகள், டிரைவர், கண்டக்டர் காத்திருப்பு அறை, ஒரே நேரத்தில் 10 பஸ்கள் நிற்கும் வகையில் ரேக்குகள், தலா 2 பொது சுகாதார வளாகங்கள், சிறுவர் பூங்காக்கள், குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் அமைந்துள்ளன.
மே 29ல் இதற்கான திறப்பு விழா நடந்தது. இருப்பினும் இதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் கடும் தொய்வு நிலவுகிறது. அரசியல் பிரமுகர்களும், பேரூராட்சி நிர்வாகமும், இதற்கான நடவடிக்கையை முறைப்படி துரிதப்படுத்த வில்லை என்ற புகார் நீடிக்கிறது. புறநகர் பஸ்கள் புறக்கணிக்கும் சூழலில் அப்பாவி பயணிகளுக்கு அலைக்கழிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டின் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பில் பயணிகள்
பரமசிவம், அ.தி.மு.க., பிரமுகர், கன்னிவாடி : நீண்ட இழுபறி நிலையில் கட்டுமான பணி இருந்தது. ஒரு வழியாக பணி முடிந்து 2023 மே மாதத்தில் அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி திறந்து வைத்தனர். அடுத்த சில மாதங்களாக மூடி வைக்கப்பட்டது.
சமீபத்தில் கடைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டு சில வாரங்களாக அரசு டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. புறநகர் பஸ்கள், மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வருகின்றன. இவையும், பஸ் ஸ்டாண்டிற்குள் வருவதில்லை.
அறிவிப்போடு போச்சு
சிவாஜி ,சமூக ஆர்வலர், அச்சாம்பட்டி : தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை போன்ற வெளிமாவட்ட புறநகர் பஸ்கள் மட்டுமின்றி கேரள, கர்நாடகா மாநில பஸ்களும் இத்தடத்தில் இயங்கி வந்தன. தற்போது பெருமளவு புறநகர் பஸ்கள் திண்டுக்கல் பைபாஸ் ரோடு வழியே சுற்றுச்சாலையில் இயக்கப்பட்டு வரும் சூழலில் அனைத்து புறநகர் பஸ்களும் கன்னிவாடி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்வதாக அறிவித்தனர்.
ஆனால் இதற்கான நடவடிக்கைகள் பெயரளவில் கூட இல்லை.
--முறைப்படுத்தலாம்
சந்துரு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர், கன்னிவாடி : அரசு பஸ்கள் இயக்கத்தில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி தடை ஏற்படுத்துகின்றனர்.
செம்பட்டி-ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் தனியார் பஸ்களுக்கு ஏதுவாக பல அரசு டவுன் பஸ் டிரிப்களை காலை, மாலை நேரங்களில் நிறுத்திவிட்டனர்.
மாணவர்கள் விபத்து அபாய நிலையில் சரக்கு வாகனங்கள், தனியார் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர். பள்ளி நேர டவுன் பஸ்களை தடையின்றி இயக்க வேண்டும். வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

