/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
/
பழநியில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED : பிப் 06, 2025 02:12 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தைப்பூசத்திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று கொடி கட்டி மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினர். அதன் பின் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள் துணியில் சூரியன், சந்திரன், வேல், மயில் சேவல்,பாம்பு, தாம்பூலம், மணி, விளக்கு வரையப்பட்ட கொடியை சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் எடுத்து வந்தனர். கொடி கம்பத்தின் முன் வைத்து பூஜைகள் நடந்தது.
காலை 10:50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.
உச்சிக்கால பூஜையில் மலைக் கோயிலில் தைப்பூசத்திற்கு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. நேற்று இரவு புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா நடந்தது. விழா நாட்களில் புதுச்சேரி சப்பரம், தந்த பல்லாக்கு, வெள்ளி ஆட்டுக்கடா, பெரிய தங்கமயில், காமதேனு, தங்க குதிரை, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
பிப்.10 ல் தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடக்கும். முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் இரவு 7:00 மணிக்கு மேல் இரவு 8:30 மணிக்குள் நடக்க உள்ளது.
அன்று இரவு 9:00 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கும். பிப்.11ல் அதிகாலையில் தோளுக்கினியானில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடக்கும்.
மதியம் 11:15 மணிக்கு மேல் மதியம் 12:00 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது.மாலை 4:45 மணிக்கு தைப்பூச திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கும்.
பிப்.14 அன்று மாலை தெப்பத் தேர் திருவிழா நடக்கும். அன்று இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா முடியும்.