/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாலிதீன் கழிவுகளால் பாழாகும் மயானம் சின்னாளபட்டியில் அதிகாரிகள் அலட்சியத்தால் அபாயம்
/
பாலிதீன் கழிவுகளால் பாழாகும் மயானம் சின்னாளபட்டியில் அதிகாரிகள் அலட்சியத்தால் அபாயம்
பாலிதீன் கழிவுகளால் பாழாகும் மயானம் சின்னாளபட்டியில் அதிகாரிகள் அலட்சியத்தால் அபாயம்
பாலிதீன் கழிவுகளால் பாழாகும் மயானம் சின்னாளபட்டியில் அதிகாரிகள் அலட்சியத்தால் அபாயம்
ADDED : பிப் 17, 2024 05:49 AM

சின்னாளபட்டி,: சின்னாளபட்டி கீழக்கோட்டை மயானத்தில் உள்ள மண் குவியல் மீது பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை குவிக்கிறது. இங்கு எரியூட்டப்படும் பாலிதீன் கழிவுகளால் தொடரும் அடர் புகை மண்டலம், கண், சுவாச பிரச்னைகள், தொற்று பரவலால் போன்ற சுகாதாரக்கேடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு மேட்டுப்பட்டி பகுதி மக்களுக்காக ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் ஒரு மயானமும் கீழக்கோட்டை பகுதி மக்களுக்காக சின்னாளப்பட்டி பைபாஸ் ரோட்டில் ஒரு மயானம், செக்காபட்டி பகுதி ஆரியநல்லூர் ரோட்டில் ஒரு மயானம், சத்யா நகர் அருகே 2 மயானங்களும் உள்ளன. பெரும்பாலான மயானங்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை விட பேரூராட்சியால் சேகரிக்கப்படும் கழிவுகளை குவிக்கும் குப்பை தொட்டிகளாக மாறி வருகின்றன. அஞ்சும் காலனி பகுதியில் திடக்கழிவு மேலாண்மைக்காக வளம் மீட்பு பூங்கா உள்ளபோதும் இடப்பற்றாக்குறை பிரச்னையை காரணமாக கூறி வந்தனர்.
அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவுப்படி தனிநபர் மூலம் இதற்காக இடம் தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு முன் பேரூராட்சி வசம் ஒரு ஏக்கர் 42 சென்ட் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.
கீழக்கோட்டை மயானத்தில் கழிவுகள் குவித்து எரிக்கப்படும் பிரச்னையை பல ஆண்டுகளாகியும் தீர்வு காணப்படாத நிலை உள்ளது அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லைஎன மக்கள் புலம்புகின்றனர். அடுத்தடுத்து புவிக்கப்படும் பாலிதீன் கழிவுகள் நச்சாக மாறி இப்பகுதியில் தொற்று பரவல் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது சவுராஷ்டிரா காலனி, மேட்டுப்பட்டி மயானம், வேலம்பட்டி ரோடு உள்ளிட்ட இடங்களில் அனுமதிற்ற சாயப்பட்டறை செயல்பட துவங்கி உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குளம் போல தேங்கி உள்ளதால் மீண்டும் நிலத்தடி நீரை மாசடையச் செய்கிறது. அங்கிருந்த மாசாணன், திம்மயன் செட்டியார் கண்மாய்கள் மனை பிரிவுகளாக மாறிய நிலையில் அசுத்தநீர் செல்ல வழியின்றி மக்களை பாதிப்படைய செய்கிறது.
கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாடு துறை
ராமு ராமசாமி ,மொழிப்போர் தியாகி, சின்னாளபட்டி :குப்பை கழிவுகளை முறையாக திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்புவதில்லை. கழிவுகளை தரம் பிரித்து உரத்தயாரிப்பிற்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். சாக்கடையில் கழிவுகள் குவிவது தாராளமாகி விட்டது. இவற்றை முழுமையாக அகற்ற நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியே குவித்து எரிக்கின்றனர். இது தவிர தினமும் பல டன்கள் அளவில் மேட்டுப்பட்டி, பைபாஸ் ரோடு, அம்பாத்துறை ரோடு உள்ளிட்ட மயான பகுதிகளில் குப்பை கழிவுகளை குவிக்கின்றனர். இதனால் அனைத்து வார்டுகளிலும் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.மழைக்காலங்களில் குடியிருப்புகளில் கழிவுநீர் புகும் அவலம் பல ஆண்டுகளாகியும் தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது. இப்பிரச்னைகளில் பேரூராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்அலட்சியம் காட்டுகின்றனர்.
-நோயாளிகளாக்கும் புகை மண்டலம்
ஆதீஸ்வரன்,சமூக ஆர்வலர், சின்னாளபட்டி :பேரூராட்சியின் கழிவுகளை வி.எம்.எஸ் காலனி, கீழக்கோட்டை மயானங்களில் குவித்து எரிக்கும் பிரச்னைக்கு பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்கவில்லை. மேட்டுப்பட்டி மயானத்தில் இப்பகுதியின் மொத்த கழிவுகளும் குவிக்கப்படுகிறது. அடுத்தடுத்து தோண்டும் குழிகளில் 5 அடி உயரத்திற்கு குப்பை கழிவுகளை குவிக்கின்றனர். அவ்வப்போது எரித்தபோதும் மக்காத பாலிதீன் கழிவுகளை அப்படியே மூடி வைக்கின்றனர். இவற்றின் மீது அடுத்தடுத்து கழிவுகளை குவிக்கின்றனர். கொசுத்தொல்லை, விஷ ஈ போன்றவற்றால் இப்பகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. புகை மூட்டம் பலத்த காற்றால் இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் சூழ மக்கள் மூச்சு திணறல், சுவாச பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
குளறுபடிகள் தாராளம்
எம்.செந்தில்மாயத்தேவர், பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் :பேரூராட்சி பகுதிகளில் கொசு மருந்து தெளிப்பு பணி சரிவர நடப்பதில்லை. பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து போன்றவற்றை கொள்முதல் செய்வதிலும், பயன்படுத்துவதிலும் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது.
துப்புரவு பணிகளை கண்காணிப்பதில் கடும் தொய்வு நிலவுகிறது. புகார் செய்வதற்கு கூட பேரூராட்சியில் அதிகாரிகளை காண முடிவதில்லை. அடிக்கடி செயல் அலுவலர்கள் இடமாற்றம் செய்வதால் பேரூராட்சி நிர்வாகத்தில் ஏராளமான குளறுபடிகள் நிலவுகிறது . தற்போது கூடுதல் பொறுப்பாக செயல் அலுவலர் உள்ளதால் கூடுதல் சுமையால் திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் கண்காணிப்பதில் பாதிப்பு அதிகரித்துள்ளது.