/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகப்பேறு மருத்துவரின் மாடித்தோட்டம்
/
மகப்பேறு மருத்துவரின் மாடித்தோட்டம்
ADDED : மார் 09, 2026 06:34 AM

பழநியில் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
அதிகரிக்கும் மக்கள் அடர்த்தி, இடப்பற்றாக்குறையால் வீடுகளில் செடி, கொடிகளை வளர்க்க வாய்ப்பில்லாத நிலை உள்ளது. எனவே தோட்டம் வைத்து பராமரிக்க விரும்புவோர் வசதியை பொறுத்து மாடித்தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர்.
பழநியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கீதா, சுப்புராஜ் தம்பதியர் 10 ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருவது கவனிக்க வைக்கிறது. மாடி அல்லாமல், வீட்டைச் சுற்றி சின்ன, சின்ன இடங்களிலும் 600க்கும் மேற்பட்ட செடி, கொடிகள் நட்டுவைத்து வீட்டையே பசுமையாக பராமரிக்கின்றனர்.
மன அமைதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது மகப்பேறு மருத்துவர் கீதா: செடிகள் வளர்ப்பது சிறுவயது ஆர்வம். ரோஜா, மூலிகைகள், காய்கறி, கீரை, மல்லி, சாமந்தி, செம்பருத்தி, செண்பகம், டிராகன் ப்ரூட், முருங்கை, கொய்யா என விதவிதமான செடிகளை பராமரிக்கிறேன். ஒவ்வொரு செடிகள் காய்க்கும் போதும் வீட்டில் புதிதாய் குழந்தை பிறந்தது போல உணர்வேன். செடிகளுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துவேன். ஓய்வு நேரத்தில் செடிகளுடன் நேரம் செலவிடுவது மன அமைதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.
இயற்கையோடு இணைந்த வாழ்வு சுப்புராஜ்: வேலை விஷயமாக வெளியூர் சென்று திரும்பும்போது வித்தியாசமான செடிகளை வாங்கி வருவது வழக்கம். புது வகை செடிகளை வீட்டுத்தோட்டத்தில் பராமரித்து மகசூல் எடுப்பது தனி பிரியம் தருகிறது. மாடிப் படிக்கட்டுக்கள் மட்டுமன்றி வீட்டுக்குள்ளும் அலங்கார செடிகள் நிறைய உள்ளன. இயற்கையோடு, இணைந்த தினசரி வாழ்வும், பொழுதும் ஒவ்வொரு நாளையும் இனிமை ஆக்குகிறது. மாடித்தோட்டம் பராமரிப்பதால், வீட்டுத்தேவைகளுக்காக அதிகம் வெளிச்சந்தையை நாடுவதில்லை. ஆரோக்கியம் கெடாத நிம்மதியான வாழ்வு வாழ்கிறோம்.

