/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு விரிவாக்கத்தில் கண்டுகொள்ளப்படாத கன்னிவாடி நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்பு, நெரிசலால் பாதிப்பு
/
ரோடு விரிவாக்கத்தில் கண்டுகொள்ளப்படாத கன்னிவாடி நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்பு, நெரிசலால் பாதிப்பு
ரோடு விரிவாக்கத்தில் கண்டுகொள்ளப்படாத கன்னிவாடி நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்பு, நெரிசலால் பாதிப்பு
ரோடு விரிவாக்கத்தில் கண்டுகொள்ளப்படாத கன்னிவாடி நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்பு, நெரிசலால் பாதிப்பு
ADDED : செப் 25, 2024 05:09 AM

கன்னிவாடி : நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியில் கன்னிவாடி கண்டுகொள்ளப்படாத நிலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்ல முடியாத அவலம் நீடிக்கிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
செம்பட்டி- -பழநி ரோட்டின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிவாடி பேரூராட்சி உள்ளது. மலைக்கிராமமான தோணிமலையை தனி வார்டாக கொண்டு 15 வார்டுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மதுரை, தேனி, திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கென தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. சுற்றிய 30க்கு மேற்பட்ட கிராமத்தினர் வெளியூர்களுக்குச் செல்ல கன்னிவாடி வரவேண்டி உள்ளது.
இருப்பினும் பயணிகள் காத்திருப்பதற்கென போதிய இட வசதி இல்லை. பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்கும் அவலமும் நீடிக்கிறது.
சில மாதங்களுக்கு முன் துவங்கிய நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திலும் பெயரளவில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கோட்டை கருப்பண்ணசுவாமி கோயில் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரையான பகுதிகள விரிவுபடுத்தப்படவில்லை. மெயின் ரோடு மட்டுமின்றி ரெட்டியார்சத்திரம் ரோட்டிலும் இருபுறமும் தனியார் ஆக்கிரமிப்பு கடைகள், கூடுதல் விளம்பர பதாகைகள் அமைத்துள்ளனர்.
இரு சக்கர, சரக்கு வாகனங்களும் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் நடக்கிறது.மாவட்ட நிர்வாகம் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கத்தை முழுமைப்படுத்தினால் மட்டுமே நெரிசல் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
ஆக்கிரமிப்பு தாராளம்
பி.முருகன்,அ.தி.மு.க., நகர துணை செயலாளர், கன்னிவாடி : மெயின் ரோட்டில் உள்ள கன்னிவாடி வழியே தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியை சுற்றி 30க்கு மேற்பட்ட கிராமத்தினர், பிற இடங்களுக்கான பஸ் வசதிக்காக கன்னிவாடிக்கு வர வேண்டியுள்ளது. ஆனால் வாகன போக்குவரத்திற்கு ஏற்ற ரோடு வசதியை முழுமையாக இல்லை. ரெட்டியார்சத்திரம் ரோடு, பழநி ரோடு, மதுரை ரோடு போன்ற நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள பகுதிகள், 4 சக்கர வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளால் குறுகி உள்ளன.
சிவாஜி ,சமூக ஆர்வலர், கன்னிவாடி : திண்டுக்கல்லில் இருந்து 5 வழித்தடங்களில் கன்னிவாடிக்கு அரசு டவுன் பஸ்கள் வருகின்றன. அவற்றில் உரிய வழித்தட அறிவிப்பு இல்லை. பயணிகள் குழப்பமடைவதுடன் பயணத்திற்காக அலைக்கழிப்பிற்கு உள்ளாகின்றனர். கன்னிவாடியில் ரூ. 5.9 கோடியில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு பல மாதங்களாகிறது. போக்குவரத்து கழக அதிகாரிகள் அலட்சியத்தால், பெரும்பாலான டவுன், புறநகர் பஸ்கள் இங்கு வருவதை தவிர்க்கின்றன.
தீர்வு தேவை
சக்திவேல், ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர், கன்னிவாடி : மெட்டூர்-பலக்கனுாத்து புதிய நான்கு வழிச்சாலை பணியில் கன்னிவாடி நகர் பகுதி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. அரசியல், செல்வாக்கு காரணமாக 2 கிலோமீட்டர் துாரத்திற்கு விரிவாக்க பணிகளை தவிர்த்துள்ளனர். மெயின் ரோட்டின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை மெத்தனமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. குறுகிய ரோட்டின் பெரும் பகுதியில் கடைகளுக்கான பொருட்களை திறந்தவெளியில் வைத்துள்ளனர். கனரக வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்ல முடியாத அவலநிலை ரோடு விரிவாக்கத்திற்கு பின்பும் தீர்வு கிடைக்கவில்லை.