ADDED : நவ 13, 2025 12:25 AM

திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குழந்தைகள் கல்வி நலன் வேண்டி, வியாபாரம் விருத்தியடைய, மழை வேண்டி, எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க வேண்டி நாம கீர்த்தனையுடன் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வராகி அம்மன் கோயில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தேங்காய்,வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

