ADDED : ஆக 24, 2026 12:44 AM

பழநி: பழநியில் விடுமுறை முகூர்த்த நாளை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழநி முருகன் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் விடுமுறை நாளை முன்னிட்டு வருகை புரிந்தனர். மேலும் ஆவணி மாத முகூர்த்த நாளை முன்னிட்டு திருஆவினன்குடியில் 80 திருமணங்கள் நடந்தன. மேலும் பழநி சுற்றுவட்டார உள்ள திருமண மண்டபங்கள், மடங்கள் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.
குறிப்பாக அதிக திருமண மண்டபங்கள் உள்ள அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு பகுதிகளில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. டூவீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டின் ஓரங்களில் நிறுத்தி சென்றதால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டன.
மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வேல்ரவுண்டானா, மயில் ரவுண்டானா பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பொது மக்கள் அவதிப் பட்டனர்.
