ADDED : செப் 05, 2026 04:20 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த ஆய்வில் கல்வி கற்காமல், எழுதப் படிக்க தெரியாதவர்களாக 750 பேர் கண்டறியப் பட்டனர்.
இவர்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள 44 வட்டார வள மையங்களில் தமிழ் எழுத்துகள், அவரவர் பெயர், ஊர் பெயர்கள் எழுதவும், வாசிக்கவும் கற்றுத்தரப்பட உள்ளது.
மேலும் கணித வாய்ப்பாடுகள், அன்றாட வாழ்க்கை கணக்குகள், தபால் அலுவலகம், வங்கியில் பணம் எடுப்பது, ஏ.டி.எம்., பயன்பாடு உள்ளிட்டவையும் கற்றுத்தரப்பட உள்ளது.
இப்பணியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் 44 பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் கோவிந்தாபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது.
திண்டுக்கல் வட்டார வளமைய பொறுப்பு அலுவலர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
கருத்தாளர்கள் சத்யபிரியா, ரஹீமாபானு பயிற்சி வழங்கினர். உதவித் திட்ட அலுவலர் திருப்பதி, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஜெயலட்சுமி பார்வையிட்டனர். ஆசிரியர் பயிற்றுநர் அமிர்தராஜ் நன்றி தெரிவித்தார்.
