/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீரமைக்கப்படாத தெரு ரோடுகள்; போக்குவரத்து நெரிசல் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டில் தீராத பிரச்னைகளால் அவதி
/
சீரமைக்கப்படாத தெரு ரோடுகள்; போக்குவரத்து நெரிசல் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டில் தீராத பிரச்னைகளால் அவதி
சீரமைக்கப்படாத தெரு ரோடுகள்; போக்குவரத்து நெரிசல் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டில் தீராத பிரச்னைகளால் அவதி
சீரமைக்கப்படாத தெரு ரோடுகள்; போக்குவரத்து நெரிசல் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டில் தீராத பிரச்னைகளால் அவதி
ADDED : மே 25, 2025 04:51 AM

ஒட்டன்சத்திரம் : குழாய் அமைக்க சேதப்படுத்தப்பட்ட தெரு ரோடுகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமம், தாராபுரம் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் என ஒட்டன்சத்திரம் நகராட்சி நான்காவது வார்டில் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மார்க்கெட் பைபாஸ் ரோடு, தாராபுரம் ரோடு கிழக்கு மேற்கு, பழநி- திண்டுக்கல் ரோடு வடக்கு, வ.உ.சி.நகர் பகுதிகள் உள்ளடக்கிய இந்த வார்டில் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லலை. போதுமான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டுக்கென தனியாக பகுதி நேர ரேஷன் கடை பிரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் அமைக்க சேதப்படுத்தப்பட்ட தெரு ரோடுகளில் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
தாராபுரம் ரோடும் மார்க்கெட் பைபாஸ் ரோடும் சந்திக்கும் பகுதியில் பல்வேறு கட்சிகள் ,நிறுவனங்களின் பிளக்ஸ்கள் அடிக்கடி வைக்கப்படுவதால் பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டில் திரும்புவதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மார்க்கெட் பைபாஸ் ரோடு வடக்கு பகுதியில் சின்ன குளத்திற்கு செல்லும் கழிவுநீர் ஓடை வார்டு பகுதியில் இன்னும் துார்வாரப்படாமல் உள்ளது. இதேபோல் சின்னகுளம் நிரம்பி மறுகால் செல்லும் பகுதியில் உள்ள ஓடை துார்வாரப்படாமல் செடி கொடிகள் முளைத்துள்ளது. தாராபுரம் ரோடு தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வரை பஸ்கள் நடுரோட்டிலே நிறுத்தப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
பிளக்ஸ் பேனர்களால் சிரமம்
டி. குமார் தாஸ், பா.ஜ., நகர பொதுச்செயலாளர், ஒட்டன்சத்திரம்: தாராபுரம் ரோடு மார்க்கெட் பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிளுக்கு சிரமம் ஏற்படுகிறது. வார்டு வழியாக சின்ன குளம் செல்லும் ஓடையை துார்வார வேண்டும். தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. மழைகாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் பெரிதாக அமைக்கப்பட வேண்டும். தாராபுரம் பழநி ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
புதிதாக ரேஷன் கடை திறப்பு
எஸ்.கோபி, பொருளாளர்,திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் : வார்டுக்குள் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை. பல இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. சாக்கடைகள் துார்வாரப்படுகிறது. தினமும் குப்பையை வீடு தோறும் வாங்கி செல்கின்றனர். சின்ன குளம் பகுதியில் இப்போது குப்பை கொட்டி தீ வைக்கப்படுவதில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
அழகேஸ்வரி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வார்டுக்கு தனியாக ரேஷன் கடை பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வ.உ.சி., நகர் பகுதியில் சேதம் அடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு உள்ளது. வார்டுக்குள் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும். இன்னும் பல இடங்களில் சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சின்னக்குளம் மறுகால் செல்லும் வாய்க்காலை துார் வார நடவடிக்கை எடுக்கப்படும். பைபாஸ் ரோடு வடக்கு பகுதியில் செல்லும் சாக்கடையை துார்வார கோரிக்கை வைத்துள்ளேன். தேவையான வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.