/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3 லட்சம் மரக்கன்றுகளால் வளமாகும் வேடசந்துார் : பசுமை பகுதியாக மாற்ற தொடர் முயற்சி
/
3 லட்சம் மரக்கன்றுகளால் வளமாகும் வேடசந்துார் : பசுமை பகுதியாக மாற்ற தொடர் முயற்சி
3 லட்சம் மரக்கன்றுகளால் வளமாகும் வேடசந்துார் : பசுமை பகுதியாக மாற்ற தொடர் முயற்சி
3 லட்சம் மரக்கன்றுகளால் வளமாகும் வேடசந்துார் : பசுமை பகுதியாக மாற்ற தொடர் முயற்சி
ADDED : அக் 19, 2025 10:06 PM

வேடசந்தூரை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றும் நோக்கில், தனியார் தொண்டு நிறுவனம் 3 லட்சம் மரக்கன்றுகளை பல்வேறு ஊராட்சிகளில் நட்டு பராமரித்து வருகிறது.
வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை என மூன்று ஒன்றியங்களை உள்ளடக்கியது வேடசந்தூர் சட்டசபை தொகுதி. வேடசந்தூர் மேற்குப் பகுதியில் ரங்கமலை தொடர்ச்சியும், வடமதுரை அய்யலூர், ராமகிரி கிழக்குப் பகுதியில், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியும் பசுமை போர்த்திய பகுதியாக காட்சியளிக்கின்றன.
இந்த மலை பகுதிகளுக்கு இணையாக குக்கிராமப் பகுதிகளையும் பசுமை நிறைந்த பூமியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூரில், சமூக ஆர்வலர் வீரா.சாமிநாதனால் துவக்கப்பட்டது 'கிரீன் அண்ட் கிளீன்' எனும் தனியார் தொண்டு நிறுவனம்.
வேடசந்தூர் கொங்கு நகர், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி வளாகங்கள், வேடசந்தூர் - கோவிலூர் ரோட்டில் சாலையோர பகுதிகள், டி.கூடலூர் என தொகுதியில் ஏராளமான இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, வறட்சி காலங்களில் தண்ணீர் வாகனங்கள் மூலம் தண்ணீர் விட்டு பராமரிக்கின்றனர்.
சமீபத்தில் சாமிநாதனின் மகன் திருமணத்தின் போது, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பத்திரிகைகளோடு வீடு தோறும் தலா இரண்டு மரக்கன்றுகளை (கொய்யா, நெல்லி) வழங்கினர்.
வேடசந்தூர் தொகுதியை பசுமை நிறைந்த தொகுதியாக மாற்றும் முயற்சியில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் மரம் நடும் பணி வீரா.சாமிநாதன் சமூக ஆர்வலர், வேடசந்தூர் : கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
வேடசந்தூர் தொகுதியில் இதுவரை மூன்று லட்சம் மரக்கன்று களை நட்டு உள்ளோம். டி.கூடலூர் ஊராட்சி பகுதியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றி விட்டோம்.
கடந்த வாரம் நடைபெற்ற எங்களது இல்ல திருமணத்தின் போது, தைவான் கொய்யா, ராஜமுந்திரி நெல்லி ஆகிய இரண்டு லட்சம் மரக்கன்றுகளை, மக்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளோம். பொது மக்களின் ஒத்துழைப்போடு தான் இதை சாதிக்க முடிகிறது என்றார்.