அர்ச்சகர்களுக்கு நல வாரியம் பிராமண ஸமாஜம் தீர்மானம்
அர்ச்சகர்களுக்கு நல வாரியம் பிராமண ஸமாஜம் தீர்மானம்
ADDED : செப் 19, 2026 11:59 PM

பழனி: 'அர்ச்சகர்கள், புரோகிதர்கள், வேதியர்கள், பூசாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நல வாரியம் அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில், தமிழ்நாடு பிராமண ஸமாஜ பிரதிநிதித்துவ பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஸமாஜ தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமை வகித்தார். நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு, இளநிலை உதவியாளருக்கு இணையான மாதாந்திர அடிப்படை சம்பளம் வேண்டும்.
சர்ச் பணியாளர்கள் நல வாரியத்தை போல, கோவில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள், வேதியர்கள், பூசாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நலவாரியம் வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு தமிழக அரசு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஸமாஜ தலைவர் ஹரிஹரமுத்து அய்யருக்கு 'அந்தண செம்மல்' விருது வழங்கப்பட்டது.
மாநில செயலர் ரமேஷ்குமார், பொருளாளர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
