/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிலாளர் நல நிதி செலுத்த நலத்துறை அறிவுறுத்தல்
/
தொழிலாளர் நல நிதி செலுத்த நலத்துறை அறிவுறுத்தல்
ADDED : நவ 14, 2024 07:11 AM
திண்டுக்கல்; 2024 ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2025 ஜன. 31-க்குள் செலுத்த வேண்டும் என தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளதாவது : தமிழக தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர், நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். நடப்பு 2024ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2025 ஜன. 31-க்குள் செலுத்த வேண்டும்.
பிரீ.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் அவர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பாடநுால் வாங்க உதவித்தொகை, 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உதவித்தொகை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-- -6 என்ற முகவரிக்கு டிச. 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.