ADDED : பிப் 17, 2025 12:58 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்- பழநி ரோட்டில் மேல் பள்ளம் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. காட்டுத் தீயிலிருந்து வனப்பகுதியை காக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. கோடையில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவி வனப்பகுதிகள் கருகுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல்- பழநி ரோடு மேல்பள்ளம் வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென பரவியதால் ஏராளமான வனப்பகுதிகள் தீக்கிரையாகின. அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர், தீயணைப்புதுறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதிகளை காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்தாண்டு காட்டுத் தீ ஏற்பட்டு பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் மாதக்கணக்கில் எரிந்தன.

