பழநியில் கூடுதலாக ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படுமா
பழநியில் கூடுதலாக ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படுமா
UPDATED : ஜூலை 13, 2026 05:02 PM
ADDED : ஜூலை 13, 2026 04:40 PM
பழநி:பழநி முருகன் கோயில், அடிவாரம் கிரிவீதியில் போதுமான ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட், வின்ச், ரோப்கார், கால பூஜை, தங்கத்தேர் உள்பட அனைத்து சேவைகளும் கட்டணம் பெற்று வழங்கப்படுகிறது.
கோயிலுக்கு நேரடியாக வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பணம் வசதி இல்லாததால் பணத்தை கையில் எடுத்துச்செல்ல வேண்டி உள்ளது. எனவே வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் பழநி கிரிவீதியில் போதுமான ஏ.டி.எம்., மையங்கள் இல்லை. கோயில் தலைமை அலுவலகத்திற்கு அருகே மட்டும் ஒரு மையம் உள்ளது. இதனால் ஏ.டி.எம்., மையங்களை தேடி அலைந்து பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன், சுற்றுலா வாகன நிறுத்தங்களில் கூடுதலாக ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
