ADDED : ஜூலை 04, 2026 06:10 AM
திண்டுக்கல்: பாலகிருஷ்ணாபுரம் அனுமந்த நகர் பெண்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்த நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நேற்று இரவு 8:00 மணிக்கு இப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் அனுமந்த நகர் மேம்பாலம் அருகே திரண்டனர். பின்னர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ் செழியன், போலீசார், ஊராட்சி செயலாளர் வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், 'காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய் மூலம் எங்கள் பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் தவிக்கிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்றனர்.
அதற்கு ஊராட்சி செயலாளர், போலீசார் முறையாக குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதையேற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
