/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி டாக்டர் சிகிச்சை; இளம்பெண் பரிதாப பலி
/
போலி டாக்டர் சிகிச்சை; இளம்பெண் பரிதாப பலி
UPDATED : நவ 22, 2024 07:08 AM
ADDED : நவ 22, 2024 02:17 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.
இவரது மனைவி பிரியதர்ஷினி, 24, என்பவருக்கு சில வாரங்களுக்கு முன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வாயிலாக, இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. நவ., 6ல் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அறுவை சிகிச்சை செய்த பகுதியில் வலி ஏற்படவே, கவுஞ்சியில் மருந்தகம் நடத்தி வந்த பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். போலி டாக்டரான பிரின்ஸ், பிரியதர்ஷினிக்கு வலி நிவாரணி ஊசியை செலுத்திய சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.
அவரை அருகில் உள்ள மன்னவனுார் சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் துாக்கி சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அனிதா, மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் கொடைக்கானலில் விசாரித்தனர்.
சுகாதாரத்துறையினர் கவுஞ்சியில் போலி டாக்டர் சிகிச்சை அளித்த மருந்தகத்தை ஆய்வு செய்து சீல் வைத்தனர். தலைமறைவான பிரின்சை, போலீசார் தேடி வருகின்றனர்.