ADDED : ஜூன் 02, 2026 06:25 AM

பழநி: பழநியில் தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி பாண்டியன் நகரில் இளம்பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., தனஞ்செயன், பழநி டவுன் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானது
அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளீஸ்வரி 35, என தெரிந்தது. முதல் கணவர் கருப்பசாமியை பிரிந்த இவர், 2022ல் பாலசமுத்திரத்தை சேர்ந்த கொத்தனார் மகுடீஸ்வரனை 36, திருமணம் செய்து கொண்டார்.
போலீசார் மகுடீஸ்வரனை பிடித்து விசாரித்தபோது அவர் காளீஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தில், ''மனைவி காளீஸ்வரிக்கு சில நாட்களாக அதே பகுதியை சேர்ந்த வேறு நபருடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்தோம். நேற்று முன்தினம் இரவு பாண்டியன் நகருக்கு வந்த நான், காளீஸ்வரியிடம் வேறு தொடர்பை கைவிட்டு என்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைத்தேன். அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பினேன்,' எனக்கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மகுடீஸ்வரனை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.
