ADDED : மார் 14, 2025 01:39 AM
ஆடுகளுக்கு நிவாரணம்விவசாயிகள் 'ஐடியா'
ஈரோடு:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான விவசாயிகள், ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த ஏழு மாதங்களில், 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய்களுக்கு பலியாகி விட்டன. இப்பிரச்னையில் பல முறை விவசாயிகள், சந்தை மதிப்பில் இழப்பீடு கேட்டு, அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கால்நடை துறை சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண இழப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க முயலவில்லை. பேரிடர் நிவாரண இழப்பீடு கோழிகளுக்கு, 100 ரூபாய், ஆடுகளுக்கு, 4,000 ரூபாய் நிர்ணயித்துள்ளனர்.
நாய்களுக்கு உரிமம் வழங்குவது, வளர்ப்பை ஒழுங்குபடுத்துவது, தெருநாய்களை கட்டுப்படுத்துவது, வெறிநாய்களை கண்காணித்து அழிப்பது என உள்ளாட்சிகளுக்கு அரசு விதி வகுத்துள்ளது.
உள்ளாட்சி அமைப்பினரே இழப்பீடு வழங்க வேண்டும். எனவே நாய்களால் பலியான ஆடு, கோழிகளுக்கு அதன் எடைக்கு கிலோ, 500 ரூபாய் நிர்ணயித்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
