/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துணிக்கடை பூட்டை உடைத்து 23 சவரன், பணம் திருட்டு
/
துணிக்கடை பூட்டை உடைத்து 23 சவரன், பணம் திருட்டு
ADDED : ஜூலை 04, 2024 02:27 AM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோ, 53. கைத்தறி பட்டு சேலை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்கிறார். இவரது கடை, தொட்டம்பாளையம் ராஜிவ் நகரில் உள்ளது. கடையை ஒட்டி வீடும் உள்ளது. இளங்கோ அதே ஊரில், வேறு பகுதியில் புதிய வீடு கட்டி குடிபெயர்ந்ததால், தினமும் பழைய வீட்டில் உள்ள கடைக்கு வந்து வியாபாரம் முடித்து, மீண்டும் பூட்டி விட்டு, புதிய வீட்டிற்கு செல்வது வழக்கம்.
வியாபாரத்தை நேற்று முன்தினம் இரவு முடித்து விட்டு, இளங்கோ வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தார்.அப்போது, கடையில் பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு பீரோக்களில் வைத்திருந்த, 23 சவரன் நகை, 8.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் கூறுகையில், 'கேமரா காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க்கை, கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். அப்பகுதி 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில், நேற்று அதிகாலை, 2:00க்கு சிவப்பு நிற கார் அந்த பகுதிக்கு வந்து விட்டு, மீண்டும், 2:30க்கு சென்றுள்ளது. காரில் வந்தவர்கள் குறித்து விசாரிக்கிறோம்,' என்றனர்.