ADDED : செப் 02, 2024 03:54 AM
ஈரோடு: ஈரோடு, வீரப்பன் சத்திரம், பெரியவலசையைச் சேர்ந்தவர் ஆனந்தன், 44. இவரது மனைவி கீதா, 40; விசைத்தறி பட்டறை தொழிலாளர்கள். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
ஆனந்தனுடன் அவரது தாய் அங்கம்மாள், 72, வசித்த நிலையில், ஆக., 30 மாலை வீட்டில் முகத்தில் ரத்த காயங்களுடன் அங்கம்மாள் இறந்து கிடந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, கீதா புகார் அளித்தார்.
உடற்கூறு பரிசோதனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது உறுதியானதால், சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி, போலீசார் ஆனந்தனை விசாரித்தனர்.
அவர், தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனந்தன் அளித்த வாக்குமூலம்:
மாத தவணையில் டிவி, மொபைல் போன் வாங்கி இருந்தேன். இதற்கு கடந்த மாதம் பணம் செலுத்தவில்லை. தாயிடம் பணம் கேட்டேன். மறுத்து திட்டியவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரம்அடைந்த நான், டிவி சத்தத்தை அதிகப்படுத்தி, பூட்டை எடுத்து, தாயின் முகம், நெற்றி, வாய் உள்ளிட்ட இடங்களில் தாக்கினேன். மயங்கி விழுந்தார். இறந்தது தெரியாது.
தாய்க்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதனால் கீழே விழுந்திருக்கலாம் என தெரிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
என் மனைவி ரத்த காயங்களை பார்த்து சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்ததால், சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.