/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலி
/
பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலி
ADDED : டிச 18, 2024 01:25 AM
தாராபுரம், டிச. 18-
தாராபுரம் அருகே, பள்ளியில் இருந்து வந்த சகோதரியை காணும் ஆசையில் ஓடி வந்த சிறுவன், பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தான்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பழநி ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 33. இவரது, 6 வயது மகள் அலங்கியம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை வகுப்பு முடிந்து, பள்ளி வாகனத்தில் சென்ற சிறுமியை, அழைத்து செல்ல அவரது தாய், தனது வீட்டின் அருகே காத்திருந்தார். பள்ளி வாகனம் வந்தபோது, உடன் அழைத்து வந்த, 3 வயது மகனை, சாலையோரம் அமர வைத்துவிட்டு, சிறுமியை அழைக்க பள்ளி வாகனம் நோக்கி வந்தார்.
சிறுமியை அழைத்துக் கொண்டு திரும்பியபோது, சிறுமியின் தம்பியான, 3 வயது சிறுவன், சகோதரியை காண ஆவலுடன் ஓடி வந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக, பள்ளி வாகனம் சிறுவன் மீது மோதியதில், தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக, சிறுவனை, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம், தாராபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.