/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதல் தொகை இருந்ததால் 7 பேர் 'சஸ்பெண்ட்': டாஸ்மாக் மேலாளர் விளக்கத்தால் சர்ச்சை
/
கூடுதல் தொகை இருந்ததால் 7 பேர் 'சஸ்பெண்ட்': டாஸ்மாக் மேலாளர் விளக்கத்தால் சர்ச்சை
கூடுதல் தொகை இருந்ததால் 7 பேர் 'சஸ்பெண்ட்': டாஸ்மாக் மேலாளர் விளக்கத்தால் சர்ச்சை
கூடுதல் தொகை இருந்ததால் 7 பேர் 'சஸ்பெண்ட்': டாஸ்மாக் மேலாளர் விளக்கத்தால் சர்ச்சை
ADDED : ஜூன் 20, 2024 06:30 AM
ஈரோடு : ''ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில், கூடுதல் தொகை இருப்பில் இருந்ததால், ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,'' என, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அம்சவேணி கூறினார்.
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட்டதால், கூடுதல் தொகை இருப்பு இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.ஈரோடு, கனிராவுத்தர் குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகமாக மதுபான விற்பனை நடப்பதால், இரு மேற்பார்வையாளர் உட்பட 7 முதல், 8 பணியாளர்கள் விற்பனையில் ஈடுபடுவர். கடந்த சில மாதங்களாக இக்கடைக்கு அனுப்பப்படும் மதுபானங்கள், விற்பனை விபரம், இருப்பு விபரம், விற்பனை தொகை செலுத்துவதிலும் குறைபாடு நீடித்தது. தவிர இக்கடையில் இருந்து இரவு, 10:00 முதல் மறுநாள் மதியம், 12:00 மணி வரை விற்பனை செய்வதற்காக இப்பகுதியில் உள்ள பல்வேறு கடைக்காரர்களும், தனி நபர்களும் மொத்தமாக மதுபானங்களை வாங்கி செல்வதாக புகார் எழுந்தது. அவ்வாறு மதுபானங்களை மொத்தமாக பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றது பற்றிய புகார் அடிப்படையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அம்சவேணி உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த, 17ல் ஆய்வு செய்து, 2 மணி நேரம் விற்பனையை நிறுத்தினர்.அப்போது மதுபான விற்பனை, இருப்பு, கையிருப்பு பணம் ஆகியவற்றில் முரண்பாடு காணப்பட்டது. பணியில் இருந்த கதிர்வேல், கண்ணன், முருகேசன், செல்வம், தணிகாசலம், மயில், மதி ஆகிய, 7 பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ததுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இது குறித்து மாவட்ட மேலாளர் அம்சவேணி கூறுகையில்,'' கடையில் நடத்தப்பட்ட ஆய்வில், விற்பனையை விட கூடுதல் தொகை இருப்பில் இருந்ததால், பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.'அப்படியானால் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றதால், அத்தொகை இருந்ததா' என்ற கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.'எந்த இடத்திலும் மது பாட்டில் விலையை விட கூடுதலாக, 5 ரூபாய், 10 ரூபாய் என டாஸ்மாக் கடையில் பெறப்படுவதில்லை. அவ்வாறாக புகார் இருந்தால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறி வருகிறார். ஆனால், ஈரோட்டில் அவரது வீட்டில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ள இக்கடையில், விற்பனைக்கும் அதிகமாக பணம் இருந்ததால், 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் தொகை எப்படி வந்தது என்ற கேள்விக்கு அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்.