/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொண்டத்து காளியம்மன் மலர் பல்லக்கில் பவனி
/
கொண்டத்து காளியம்மன் மலர் பல்லக்கில் பவனி
ADDED : ஜன 15, 2024 10:47 AM
கோபி: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், பிரமாண்ட மலர் பல்லக்கில், பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் கடந்த, 11ம் தேதி தீ மிதி விழா நடந்தது. இதையடுத்து மலர் பல்லக்கு ஊர்வலம், நேற்று அதிகாலை கோலாகலமாக நடந்தது.
சம்பங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை செவ்வந்தி, ரோஜா, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு மலர்களால், பிரமாண்ட பல்லக்கு தயாரிக்கப்பட்டது. அதன்பின் சீரியல் பல்பு மற்றும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர், நேற்று அதிகாலை, 1:15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டார்.
பாரியூரில் துவங்கி பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, முருகன்புதுார், நஞ்சகவுண்டன்பாளையம் பிரிவு, மேட்டுவலவு வழியாக, கோபி நகரை பல்லக்கு அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து, பல்லக்கில் பவனி வந்த அம்மனை தரிசித்தனர். பின் சரவணா தியேட்டர் சாலை, பெருமாள் கோவில் வீதி, ராஜவீதி, கடைவீதி வழியாக, கோபி பெருமாள் கோவிலை அடைந்தது.