ADDED : ஜூலை 15, 2026 05:43 AM
நம்பியூர்:நம்பியூர் அருகே கெடாரையில் பழமையான ஆலமரத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பரம்பரையாக பூஜை செய்த பூசாரிகளை, இரண்டாண்டுகளாக பூஜை செய்ய முடியாமல் மற்றொரு தரப்பினர் தடுத்து வந்துள்ளனர்.
இதனால் பரம்பரை பூசாரி தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இதில் கோவில் திருவிழா மற்றும் செயல்பாடுகளில் மகேஷ்குமார், பழனிச்சாமி, பெரியசாமி, தண்டபாணி ஆகியோர் கலந்து கொள்ள கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு நகலை, பரம்பரை பூசாரி தரப்பினர், வரப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், நம்பியூர் தாசில்தார் மற்றும் இந்து சமய அறநிலை துறையினரிடம் வழங்கினர். இதை தொடர்ந்து பரம்பரை பூசாரி தரப்பினர் பூஜை செய்வதற்காக, கோவிலுக்கு நேற்று வந்தனர். அப்போது எதிர்தரப்பினர் உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். இதனால் பரம்பரை பூசாரி தரப்பை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் முன் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரிடையே அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
