/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுால் வழங்குவதில் தொடர் தாமதம்; '20 சதவீதமே வேட்டி உற்பத்தி'
/
நுால் வழங்குவதில் தொடர் தாமதம்; '20 சதவீதமே வேட்டி உற்பத்தி'
நுால் வழங்குவதில் தொடர் தாமதம்; '20 சதவீதமே வேட்டி உற்பத்தி'
நுால் வழங்குவதில் தொடர் தாமதம்; '20 சதவீதமே வேட்டி உற்பத்தி'
ADDED : அக் 18, 2024 07:23 AM
ஈரோடு: நுால் வழங்குவதில் தொடர் தாமதம் ஏற்படுவதால், இலவச வேட்டி உற்பத்தி பணி, 15 முதல், 20 சதவீதமே முடிந்துள்ளது.
தை பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கு, 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டி, 1 கோடியே, 77,64,471 சேலை உற்பத்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்., 6 முதல், '40ஸ்' பாலியஸ்டர் காட்டன் நுால் வரத்துவங்கியது. ஆனால், வேட்டி கரைக்கான நுால், பாபின் கட்டை போதிய அளவு வராததால், குறைந்த தறிகளில் மட்டும், வேட்டி உற்பத்தி பணி நடக்கிறது. இலவச வேட்டி உற்பத்தி பணி, 15 முதல், 20 சதவீதம் முடிந்துள்ளது. சேலைக்கான நுால் வரத்தாகி, 10க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். ஆனாலும், நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காததால், உற்பத்தி பணி துவங்கவில்லை.
இதுபற்றி விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பொங்கலுக்கான வேட்டி, சேலை பணியை, டிச., 30க்குள் பணியை முடிந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்டி, சேலையை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், தீபாவளிக்கு இன்னும், 13 நாட்களே உள்ள நிலையில் நெசவாளர்களுக்கு புதிய ஆர்டரை வழங்கி, கூலி பணத்தை விடுவித்தால் சங்கம் மூலம் போனஸ் வழங்க இயலும். தவிர, கடந்தாண்டுகளில் உற்பத்தியான இலவச வேட்டி, சேலைக்கு வழங்க வேண்டிய, 123 கோடி ரூபாயை நிலுவையை முதற்கட்டமாக வழங்கினால் கூட, ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தீபாவளியை கொண்டாடும் அளவுக்கு குறைந்தபட்ச தொகை கிடைக்கும். இலவச வேட்டி, சேலையை உற்பத்தியை விரைவில் துவங்க செய்வதுடன், பழைய நிலுவை தொகையையும் விடுவிக்க நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு கூறினர்.