ADDED : ஜூலை 20, 2026 05:55 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பணியிடம், ஐந்து மாதங்களுக்கு
மேலாக காலியாக உள்ளதால், விசாரணையில் நிர்வாக ரீதியான தடைகளை
போலீசார் சந்திக்கின்றனர்.
ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு,
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. சட்டசபை தேர்தலின்
போது ஏற்கனவே இருந்த சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பணியிட மாற்றம்
செய்யப்பட்டார். புதிதாக இதுவரை யாரையும் நியமிக்கவில்லை. அதுபோல்
ஐந்து மாதங்களாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரும், மருத்துவ விடுப்பில்
உள்ளார். தொழில் நுட்ப பிரிவு எஸ்.ஐ., மட்டுமே உள்ளார். இதனால் சைபர்
கிரைம் தொடர்பான குற்ற நடவடிக்கைகளை விசாரிக்க, சட்ட நடவடிக்கை
எடுப்பதில், பெரும் இடையூறுகளை போலீசார் சந்திக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அதிகாரிகள்
பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் புகாருக்கு ஆளான
நபர்களை சட்ட ரீதியாக விசாரிக்க பல்வேறு இடையூறு ஏற்படுகிறது.
இதற்கு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், கூடுதல்
வேலையாக இருப்பதால் சட்ட ரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்த
தாமதம் ஏற்படுகிறது.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை
விசாரிக்க பல நாட்களாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் பல நடைமுறை சிக்கல் உருவாகிறது.
எனவே காலியாக உள்ள ஏ.டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
