/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பில் சிக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பில் சிக்கல்
ADDED : பிப் 12, 2024 11:05 AM
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 11,559 மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; பல்வேறு காரணங்களால், 11 ஆயிரம் பேரின் தகவல் சேகரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்குவதற்காக, தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் உரிமை
திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதாரம் சார்ந்த தகவல் சேகரிப்பு பணி, கடந்தாண்டு நவ., 29ம் தேதி துவங்கி நடைபெற்று
வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 21 வகை மாற்றுத்திறனாளிகள், மொத்தம் 22,686 பேரின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுவைச்சேர்ந்த 333 கணக்கெடுப்பாளர்கள், வீடுவீடாக சென்று, மாற்றுத்திறனாளிகள் குறித்து, தகவல் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு திட்ட அலுவலர் நமச்சிவாயம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள், 32 ஆயிரத்துக்கும் மேல் உள்ளனர். இவர்களில், ஐந்தாயிரம் மாற்றுத்திறனாளிகளின், முழு முகவரி, ஆதார் எண், மொபைல் எண் விவரங்கள் இல்லை. இறப்பு, இடம்பெயர்தல் நீங்கலாக, அடையாள அட்டை வைத்துள்ள 22,686 மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறாத புதிய மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதுவரை, 11,559 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது; இவர்களில், 440 பேர், புதிதாக கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகள். இன்னும் 11,127 மாற்றுத்திறனாளிகளின் விவரம் சேகரிக்கவேண்டியுள்ளது.
பெற்றோர் சிலர், தங்கள் குழந்தைகளை மாற்றுத்திறனாளியாக பதிவு செய்ய தயங்குகின்றனர்; தகவல்களை வழங்க மறுக்கின்றனர். அதேபோல், நகர பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், சந்தேக அடிப்படையில், கணக்கெடுப்பாளர்களிடம் விவரங்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். வெளியூர் செல்லும் மாற்றுத்திறனாளிகளை மீண்டும் திருப்பூர் திரும்பிய பின்னர்தான், பதிவு செய்ய
முடியும்.
அரசின் நலத்திட்ட உதவிகள், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையவேண்டும் என்பதற்காகவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும், தயக்கமின்றி தகவல்களை கணக்கெடுப்பாளர்களிடம் தெரிவித்து, பதிவு செய்துகொள்ளவேண்டும். கணக்கெடுப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்குப்படி, அனைத்து மாற்றுத்திறனாளிகள் விவரங்களையும் பதிவு செய்ய முனைப்புகாட்டிவருகிறோம். இதற்காக, கணக்கெடுப்பாளர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.