/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விலங்குகளின் புகலிடமான கோர்ட், பஞ்., யூனியன்
/
விலங்குகளின் புகலிடமான கோர்ட், பஞ்., யூனியன்
ADDED : செப் 06, 2011 01:43 AM
கொடுமுடி : கொடுமுடியில் நீதிமன்றம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களின்
வாயிலில் பல்வேறு விலங்குகள் பல ஆண்டுகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.
கொடுமுடி - ஏமகவுண்டனூர் நெடுஞ்சாலையில் நீதிமன்றம், பஞ்சாயத்து யூனியன்
அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பொது நூலகம், அரசு மருத்துவமனை,
டவுன் பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. ஏமகவுன்டனூர் முதல் கடை
வீதி வரையும் வாகனப் போக்குவரத்தும் அதிகம். இப்பகுதியில் ரோட்டோர
ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. புண்ணிய தலமான கொடுமுடியில் பல்வேறு
ஊர்களில் இருந்தும் வந்து திருமணம் நடத்துகின்றனர். திருமண ஊர்வலம், கோவில்
விழாக்கள் போன்றவற்றுக்காக குதிரை, ஒட்டகம் போன்றவற்றை வாடகைக்கு
வாங்குகின்றனர். இத்தகைய விலங்குகளை வைத்து பிழைப்பு நடத்துவோரும்
கொடுமுடியில் அதிகம். ஏமகவுன்டனூர் ரோட்டோரம், நீதிமன்றம் மற்றும்
பஞ்சாயத்து யூனியன் அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டி வழிநெடுக, இவர்கள் தங்கள்
விலங்குகளை கட்டி வைத்துள்ளனர். வரிசையாக மாடுகள், குதிரைகள், ஒட்டங்கள்
கட்டி வைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் சாணத்தின் துர் நாற்றமும், இவை போடும்
சத்தமும், அப்பகுதி வழியே செல்வோரையும், அலுவலகத்தில் பணிபுரிவோரையும்
இம்சிக்கிறது. கொடுமுடி பொது நலச்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
ஏமகவுன்டனூர் ரோட்டோர ஆக்கிரமிப்பையும், விலங்குகள் ஆக்கிரமிப்பையும்
அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறை மற்றும் கலெக்டர் மக்கள் குறைதீர்
கூட்டத்தில் மனு அளித்தும் இப்பிரச்னை தீரவில்லை. இப்பகுதி அலுவலங்களுக்கு
வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர். இவ்வழியே
வரும் பள்ளிக் குழந்தைகளும், விலங்குகள் குறித்த அச்சத்துடன் நடந்து
செல்கின்றனர். கட்டிட ஆக்கிரமிப்பால் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

