/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈமு பார்ம்ஸ் மோசடி; புகாரளிக்க அழைப்பு
/
ஈமு பார்ம்ஸ் மோசடி; புகாரளிக்க அழைப்பு
ADDED : ஜன 16, 2024 10:11 AM
ஈரோடு: பெருந்துறையில் சக்தி ஈமு பார்ம்ஸ், 2012 வரை செயல்பட்டது. நிறுவன உரிமையாளர் மற்றும் பங்குதாரர்களாக வெள்ளோட்டை சேர்ந்த ராமசாமி, 52, அவர் மனைவி சாமியாத்தாள், 47, ஈரோடு சம்பத் நகர் ஹவுசிங் யூனிட் தங்கவேல், 46, இவரின் மனைவி தேவிகா, 40, சென்னிமலை இச்சிப்பட்டி பழனிசாமி, 51, சந்திரன், 55, செயல்பட்டனர்.
கவர்ச்சியாக அறிவிப்பு வெளியிட்டு, 62 முதலீட்டாளர்களிடம், 1.24 கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். ஆனால், உரிய காலத்தில் தராமல் மோசடி செய்தனர்.
முதலீட்டாளர் புகாரின்படி ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 6 பேரையும் கைது செய்தனர். நிறுவனத்தின் அசையும், அசையா சொத்து மற்றும் வங்கி கணக்குகளை முடக்கினர்.
இவ்வழக்கு கோவையில் டான்பிட் நீதிமன்றத்தில் நடக்கிறது. பாதிக்கப்பட்ட, 62 பேருக்கும் பணத்தை திரும்ப கொடுத்து விட்டதால், ஆறு பேருக்கும் ஒரு நாள் சிறை தண்டனை, தலா, 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது சக்தி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் வழக்கு முடித்து வைக்கப்படவுள்ளது.
எனவே நிறுவனத்தில் முதலீடு செலுத்தி, பாதிக்கப்பட்டு இதுவரை புகாரளிக்காதவர்கள் இருந்தால், ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள, ஈரோடு மாவட்ட பொருளாளதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தரலாம் என்று அழைப்பு விடப்பட்டுள்ளது.