/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடங்கியது ஈரோடு புத்தகத் திருவிழா
/
தொடங்கியது ஈரோடு புத்தகத் திருவிழா
ADDED : ஆக 02, 2025 01:44 AM
ஈரோடு, ஈரோடு, சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில், அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், 21வது ஈரோடு புத்தகத்திருவிழா நேற்று துவங்கியது.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசுகையில், ''இங்கு, 230 அரங்குகள் உள்ளன. அதில், 86 அரங்கில் ஆங்கில பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளன,'' என்றார்.
திருவிழாவை துவக்கி வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியது: முதல்வர் ஸ்டாலின் தனக்கு வழங்கும் நுால்களை பல்வேறு நுாலகங்களுக்கு வழங்கி வருகின்றார். சிலைகள் அமைக்கும் இடங்களில் எல்லாம், சிலைகளுக்கு கீழே நுாலகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். நமது மாவட்டத்தில் ஈரோடு பி.எஸ்.பார்க் உட்பட பல இடங்களில் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு சி.என்.கல்லுாரி அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டு, 54 ஏக்கர் நிலத்தில் உள் விளையாட்டு அரங்கம், நுாலகம் உள்ளிட்ட பல்வேறு பணி செய்ய உள்ளோம். அடுத்தாண்டு இங்கு புத்தகத்திருவிழா நடக்கும் முன், பணி துவங்கி விடும் என நினைக்கிறேன். எனவே, அடுத்தாண்டுக்கு இப்புத்தகத் திருவிழாவுக்கு வேறு நல்ல இடம் தேர்வு செய்து கொள்வது சிறந்தது என நினைக்கிறேன். இவ்வாறு பேசினார்.
நிகழ்வில் சென்னை 'பெப்பாசி' தலைவர் சேது சொக்கலிங்கம், கலெக்டர் கந்தசாமி, எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவிழாவில் இன்று
புத்தகத் திருவிழாவில் தினமும் மாலை, 6:00 மணிக்கு சொற்பொழிவு நடக்கும். இன்று மாலை, 'மண்ணுயிர் நுண்ணுயிர் உன் உயிர்' என்ற தலைப்பில் டாக்டர் கு.சிவராமன், பேச்சாளர் மு.ராகவேந்திரன் பேசுகின்றனர்.
மகன் உயிரிழந்த துக்கம் தாளாமல் தந்தை மரணம்
புன்செய்புளியம்பட்டி, ஆக. 2
புன்செய்புளியம்பட்டியில் மகன் இறந்த துக்கம் தாளாமல், தந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
புன்செய்புளியம்பட்டி நகராட்சி குமரன் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 57, பழக்கடை வியாபாரி. இவரின் மூத்த மகன் கார்த்திக், 31; உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த, 29ம் தேதி இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், தந்தை ராஜேந்திரனிடம் குடும்பத்தினர் தகவல் தெரிவிக்காமல் மறுநாள் அதாவது, 30ம் தேதி கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சியில் அவரும் உயிரிழந்து விட்டார்.
தந்தை, மகன் மரணத்தால் குடும்பம் மற்றும் உறவினர்கள் மாளாத சோகத்தில் மூழ்கினர். இருவரது உடல்களும் புன்செய்புளியம்பட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஒரு மாதத்தில் மயான வசதி பெருந்துறை தாசில்தார் உறுதி
பெருந்துறை, ஆக. 2
சென்னிமலை ஒன்றியம் ஈங்கூர் கிராமம் திருமறைப்பாக்கம், சி.எஸ்.ஐ., காலனிக்கு மயானம் இல்லை. இதனால் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில், 40 ஆண்டுகளாக உடல்களை அடக்கம் செய்து வந்தனர். ரயில்வே துறை சார்பில் இருபுறமும் கம்பி வேலி அமைக்கப்பட்டதால், உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமுறைபாக்கத்தை சேர்ந்த பாப்பா (எ) எஸ்தர், ௭௫, நேற்று இறந்து விட்டார். உடலை அடக்கம் செய்ய மயானம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் பிரேதத்துடன் ஈங்கூர் நால்ரோடு பகுதியில் மறியல் செய்ய போவதாக உறவினர்கள் கூறினர்.
இதையடுத்து பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இன்னும் ஒரு மாதத்துக்குள் மயானம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எழுத்து மூலமாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து ரயில்வே துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் உடலை அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டனர்.