/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடுபாதை இல்லாமல்பூட்டி வைக்கப்பட்ட தங்க ரதம்
/
ஓடுபாதை இல்லாமல்பூட்டி வைக்கப்பட்ட தங்க ரதம்
ADDED : ஜூலை 28, 2011 03:08 AM
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கோவிலில் தங்க ரதம் ஓடுபாதை தளம்
அமைக்கப்படாததால், வெள்ளோட்டத்துக்கு பிறகு புதிய தங்கரதம் அறையில் பூட்டி
வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஹிந்து
சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான முக்கிய கோவில்களில் தங்கரதம் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில், திண்டல் முருகன்
கோவில், கோபி பச்சைமலை முருகன் கோவில் ஆகியவற்றில் தங்க ரதம் உள்ளது.
பழம்பெருமை வாய்ந்த கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு புதிதாக
தங்க ரதம் செய்ய வேண்டும் என்பது, பக்தர்களின் கனவாக இருந்தது. தி.மு.க.,
ஆட்சி காலத்தில் இருந்த அறங்காவலர் குழுவினர் எடுத்த முயற்சியின் பலனாக,
பக்தர்களின் நன்கொடை மூலம் இரண்டு கோடி ரூபாய் செலவில், பாரியூர் கோவிலில்
அழகிய வேலைப்பாடுடன் கூடிய தங்கரதம் உருவாக்கப்பட்டது.தமிழக கோவில்களில்
51வது தங்கரதமாக பாரியூர் கோவில் தங்கரதம், ஃபிப்ரவரி மாதம் வெள்ளோட்டம்
நடந்தது. தங்கரதம் கோவில் பிரகாரத்துக்குள் செல்ல வசதியாக, 30 லட்சம்
ரூபாய் செலவில் ஓடுபாதை தளம் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான
திட்ட மதிப்பீடுகள் கோவில் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது.
தமிழகத்தில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தங்க தேர் வெள்ளோட்டம் நடந்து ஐந்து
மாதத்துக்கு மேலாகியும், ஓடுபாதை தளம் அமைக்கப்படவில்லை. புதிதாக
செய்யப்பட்ட தங்க ரதமும், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த பயன்படாமல்,
தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும்
ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்ற ஐந்து மாதங்களில் பக்தர்கள் நேர்த்தி
கடன் செலுத்த தங்கத்தேர் அளிக்கப்பட்டு இருந்தால், அறநிலையத்துறைக்கு பல
லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். பக்தர்களின் எதிர்பார்ப்பை
நிறைவேற்றும் வகையில் புதிய அரசு பாரியூர் கோவில் வளாகத்தில் தங்க தேர்
ஓடுபாதை விரைவில் அமைக்கப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.