/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோர்ட் உத்தரவை மீறி இயங்கும் தோல் சந்தை :கலெக்டரிடம் பி.பி.அக்ரஹாரம் மக்கள் மனு
/
கோர்ட் உத்தரவை மீறி இயங்கும் தோல் சந்தை :கலெக்டரிடம் பி.பி.அக்ரஹாரம் மக்கள் மனு
கோர்ட் உத்தரவை மீறி இயங்கும் தோல் சந்தை :கலெக்டரிடம் பி.பி.அக்ரஹாரம் மக்கள் மனு
கோர்ட் உத்தரவை மீறி இயங்கும் தோல் சந்தை :கலெக்டரிடம் பி.பி.அக்ரஹாரம் மக்கள் மனு
ADDED : செப் 07, 2011 01:49 AM
ஈரோடு: ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி, ஆட்டுத்தோல் சந்தை நடக்கிறது.
ஈரோடு பி.பி.அக்ரஹாரம், எம்.ஜி.ஆர். நகரில், காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டிய காலி இடத்தில், 2009 ஜூலை முதல், செவ்வாய் தோறும் ஆட்டுத்தோல் சந்தை நடக்கிறது. வாரம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆட்டுத்தோல் விற்பனையாகிறது. தோலில் வைக்கப்படும் உப்பு, தோலில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சதை கழிவு ஆகியவற்றால், சந்தையின் சுற்றுப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் மாறியுள்ளது. தோல் கழிவில் புழுக்கள் உற்பத்தியாகி கடும் துர்நாற்றமும், ஈக்கள் உற்பத்தியும் அதிகரித்தது. தொற்று நோய்க்கு பயந்து, சொந்த வீடுகளை விற்றுவிட்டு, வெளியேறும் நிலைக்கு மக்கள் ஆளாகினர்.
சந்தை நடத்த டவுன் பஞ்சாயத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம், மற்றும் பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெறவில்லை. சந்தையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், சந்தைக்கு தடைவிதித்து, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர், அறிவிப்பு பலகை வைத்தார். மூன்று வாரங்களாக சந்தை நடக்காததால், மக்கள் நிம்மதி அடைந்தனர். டவுன் பஞ்சாயத்து தடைக்கு, நீதிமன்றம் மூலமாக இடைக்கால தடை வாங்கி, மீண்டும் சந்தையை நடத்தினர். பொதுமக்கள் சார்பில், இடைக்கால தடையை நீக்கவேண்டும் என நடந்த வழக்கில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, டவுன் பஞ்சாயத்து ஆகிய அரசு துறைகளும், சந்தை நடத்த அனுமதிக்காத நிலையில், சந்தையை நிறுத்திக்கொள்ளும் படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதற்கான உத்தரவு கடிதம் வரவில்லை என்பதை சாதகமாக பயன்படுத்தி, மீண்டும் கடந்த இரண்டு வாரங்களாக சந்தையை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு வரவில்லை; அதுவரை ஏதும் செய்ய இயலாது எனக்கூறி, போலீஸாரும், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலரும், அமைதி காக்கின்றனர். இதனிடையே ஊர் பொதுமக்கள் சார்பில், நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக, நடக்கும் சந்தையை தடுத்து நிறுத்த காரி, மாவட்ட கலெக்டர் காமராஜிடம் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரியுள்ளனர்.

