/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர்-ஆப்பக்கூடலில் கனமழையால் கடைகளில் புகுந்த வெள்ளம்; வேருடன் சாய்ந்த மரம்
/
அந்தியூர்-ஆப்பக்கூடலில் கனமழையால் கடைகளில் புகுந்த வெள்ளம்; வேருடன் சாய்ந்த மரம்
அந்தியூர்-ஆப்பக்கூடலில் கனமழையால் கடைகளில் புகுந்த வெள்ளம்; வேருடன் சாய்ந்த மரம்
அந்தியூர்-ஆப்பக்கூடலில் கனமழையால் கடைகளில் புகுந்த வெள்ளம்; வேருடன் சாய்ந்த மரம்
ADDED : அக் 16, 2024 07:04 AM
அந்தியூர்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, இரவில் தொடர்ந்து மழை பெய்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டிய மழையால், அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட், பூக்கடை முக்கு பகுதியில், முழங்கால் அளவுக்கு மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து நின்றது. பிரம்மதேசம் சாலையில் இரு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆப்பக்கூடல், சக்திநகரில் தனியார் வேளாண்மை கல்லுாரி அருகே, புங்கமரம் வேருடன் சாய்ந்தது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.பர்கூர் வனப்பகுதியில், வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தாமரைக்கரை செல்லும் சாலையில், சுலோப் அருகே மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றினர்.
மாநகரில் சாரல் மழை
ஈரோடு மாநகரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று காலை முதலே வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு துவங்கிய சாரல் மழை, மாலை 5:45 மணி வரை பெய்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
கடம்பூரில் கனமழை
கடம்பூர் மற்றும் சுற்று வட்டார மலை கிராமங்களில் நேற்று மதியம், 1:00 மணிக்கு தொடங்கிய மழை, 4 மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதனால், கடம்பூர் செல்லும் வழியில் தன்னாசியப்பன் கோவில், இரட்டைபாலம், மல்லியம்மன் கோவில் உள்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் அருவி போல் கொட்டியது. இதேபோல் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய மழை, 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மீண்டும் இடைவெளி விட்டு இரவு, 8:00 மணிவரை துாறல் போட்டது.