/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காதல் மனைவியை கொன்று சடலத்துடன் துாங்கிய கணவன்
/
காதல் மனைவியை கொன்று சடலத்துடன் துாங்கிய கணவன்
ADDED : மே 05, 2025 03:48 AM
பவானி: பவானியில் காதல் மனைவியை போதையில் கொன்றது தெரியாமல், விடிய விடிய சடலத்தின் அருகில் படுத்து துாங்கிய கணவனை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சூரியபிரபா, 24. இவரின் கணவர் கார்த்திக், 24, கூலி தொழிலாளி. மனைவி நேற்று காலை பேச்சு, மூச்சின்றி கிடப்பதாக கூறி, பவானி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றார்.
மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்து விட்டது தெரிந்தது. பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அங்கு சென்ற போலீசார் கார்த்திக்கிடம் விசாரித்தனர் முன்னுக்கு பின் முரணாக பேசவே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் கூறியதாவது:
திருச்சியை சேர்ந்த கார்த்திக், தனியார் பஸ்கிளீனராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சூரியபிரபாவிடம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. மூன்று மாதங்களுக்கு முன், திருச்செங்கோட்டில் ஒரு கோவிலில் திருமணம் செய்து, பவானியில் வசித்தனர்.
மது போதையில் நேற்று முன்தினம் இரவு வந்த கார்த்திக், மனைவி சூரியபிரபாவுடன் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொன்று விட்டு, சடலத்தின் அருகில் படுத்து துாங்கி விட்டார்.
நேற்று காலை விடிந்ததும் மனைவியை எழுப்பினார். எழாததால் பவானி அரசு மருத்துவமனைக்கு துாக்கி வந்தார். அங்கே வந்த பிறகே, இறந்தது தெரியவந்தது. மது போதையில் மனைவியை கொன்றது தெரியாமல் துாங்கிய விபரீத கணவனை, போலீசார் கைது செய்தனர்.