/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிய மாற்றங்களுக்கு தயாராகும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்
/
புதிய மாற்றங்களுக்கு தயாராகும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்
புதிய மாற்றங்களுக்கு தயாராகும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்
புதிய மாற்றங்களுக்கு தயாராகும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்
ADDED : அக் 26, 2025 12:51 AM
திருப்பூர், திருப்பூரை சேர்ந்த உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களும், பருத்தியுடன், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கால்பதிக்க தயாராகி விட்டனர்.
'பின்னலாடை நகர்' ஆன திருப்பூர், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை ஆடைகள் உருவாக்கம், உள்நாட்டு ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்துக்கு அவசியமானதாகிவிட்டது.
புதிய தொழில்நுட்பத்தில், கூடுதலாக 'பிராசசிங்' செய்யப்படும் பாலியஸ்டர் துணி ஆடைகள், வியர்வையை நன்கு உறிஞ்சும் பருத்தி நுாலிழைகளுக்கு இணையாக மாறுகின்றன. விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பெரும்பாலும் வியர்வையை நன்கு உறிஞ்சும் பாலியஸ்டர் ஆடைகளையே அணிகின்றனர். மதிப்பு கூட்டிய பாலியஸ்டர் ஆடை உற்பத்தியில், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கால்பதிக்க வேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. அணிந்தால், பருத்தி ஆடைகள் போல் உணரப்படும் பாலியஸ்டர் ஆடை உற்பத்தி, சீனாவில் துவங்கிவிட்டது.
இளைஞர்கள் மத்தியில் அத்தகைய ஆடைகளுக்கு வரவேற்பும் அதிகம் கிடைத்து வருகிறது. திருப்பூருக்கு பருத்தி நுாலிழை பின்னலாடை உற்பத்தி தனி அடையாளமாக இருந்தாலும், இனிவரும் காலகட்டங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆடைகளை உற்பத்தி செய்ய, பாலியஸ்டர் ஆடை உற்பத்தியிலும் கால்பதிக்க வேண்டும் என்பதே உள்நாட்டு சந்தையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
சீனாவில் இருப்பது போல், கூடுதல் 'பிராசசிங்' செய்த பாலியஸ்டர் ஆடை உற்பத்தியை துவக்க திட்டமிட்டுள்ளோம். சூரத், லுாதியானாவில், இதேபோல் 'பிராசசிங்' ஆரம்பித்து விட்டனர். துணி இறக்குமதிக்கு பதிலாக, நுாலிழை இறக்குமதி செய்து, திருப்பூரிலேயே விரைவில் பாலியஸ்டர் பின்னல் துணி உற்பத்தி துவங்கப்பட வேண்டும்.
அப்போதுதான், அனைத்து ஜாப் ஒர்க் பிரிவுகளும் பயன்பெறும்; திருப்பூரும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியும். திருப்பூர் நிறுவனங்கள் 'கிளஸ்டர்' ஆக இணைந்து, பொதுவான 'பிராண்ட்' வாயிலாக, புதிய தொழில்நுட்ப ஆடைகளை சந்தைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

