/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
217 சவரன் தங்க நகை, ரூ.89 லட்சம் மோசடி 35 பேரை ஏமாற்றிய கூலி தொழிலாளி கைது
/
217 சவரன் தங்க நகை, ரூ.89 லட்சம் மோசடி 35 பேரை ஏமாற்றிய கூலி தொழிலாளி கைது
217 சவரன் தங்க நகை, ரூ.89 லட்சம் மோசடி 35 பேரை ஏமாற்றிய கூலி தொழிலாளி கைது
217 சவரன் தங்க நகை, ரூ.89 லட்சம் மோசடி 35 பேரை ஏமாற்றிய கூலி தொழிலாளி கைது
ADDED : டிச 25, 2024 02:57 AM

ஈரோடு:'நபார்டு' வங்கியில் விவசாய கடன், மானியத்துடன் பெற்று தருவதாக, 35 பேரிடம், 217 சவரன் தங்க நகை, 89 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த கூலி தொழிலாளியை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், புது மேட்டூரை சேர்ந்த ரமேஷ் குமார் மனைவி சசிகலா, 35; ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நபார்டு வங்கி
ஆப்பக்கூடல், வேலமரத்துாரை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாமூர்த்தி, 31; நபார்டு வங்கியில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு விவசாய கடன், மானியத்துடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
விவசாய கடன் பெற, 12 சவரன் தங்க நகை, 9.60 லட்சம் ரூபாய் வழங்கினேன். சில நாட்கள் கழித்து விவசாய கடன் கிடைத்து விட்டதாக குறிப்பிட்ட தொகை வழங்கினார்.
அதன்பின் அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்று, விவசாய கடனாக என்னிடம் கொடுத்த தொகையை பெற்று கொண்டார். என்னிடம் பணம், நகையை பெற்று மோசடி செய்த கருணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை அந்தியூர் போலீசார் விசாரித்தபோது, இதே போல் பலர் பணம், நகை கொடுத்து கருணாமூர்த்தியிடம் ஏமாந்தது தெரியவந்தததால், வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
கிளை சிறை
இன்ஸ்பெக்டர் சங்கீதா விசாரணை நடத்தி, கருணாமூர்த்தியை கடந்த, 23ல் கைது செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இந்த மோசடி, 2023 நவ., முதல், 2024 மே வரை நடந்துள்ளது. மானியத்துடன் வாங்கித்தருவதாக, 35 பேரிடம் இருந்து, 217 சவரன் தங்க நகை, 89 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார்.
தங்க நகைகளை பல்வேறு தனியார் வங்கி, நகை அடகு கடைகளில் வைத்து பணம் பெற்று ஏலச்சீட்டுகளில் முதலீடு செய்துள்ளார்.
முதலீட்டாளர்கள் பணம் கேட்கும் போது சிறு தொகையை வழங்கியுள்ளார். அவரிடம் இருந்து அடமானம் வைத்த தங்க நகைக்கான ரசீது கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நகைகளை அடமானம் வாங்கியவர்கள் விற்க இயலாது.
இவ்வாறு கூறினர்.