/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யாசகமற்ற தாயகம் உருவாக்குவோம்: ரூ.101 'மொய் திட்டத்தில்' அமைக்கப்படும் காப்பகம்
/
யாசகமற்ற தாயகம் உருவாக்குவோம்: ரூ.101 'மொய் திட்டத்தில்' அமைக்கப்படும் காப்பகம்
யாசகமற்ற தாயகம் உருவாக்குவோம்: ரூ.101 'மொய் திட்டத்தில்' அமைக்கப்படும் காப்பகம்
யாசகமற்ற தாயகம் உருவாக்குவோம்: ரூ.101 'மொய் திட்டத்தில்' அமைக்கப்படும் காப்பகம்
ADDED : ஜன 16, 2024 11:34 AM
மனநலம் பாதித்தோர், கைவிடப்பட்டோர், நோய் பாதித்தோர், முதியவர்கள் என பலரும் பாதுகாக்கப்படும் ஈரோடு அட்சயம் அறக்கட்டளை, 101 ரூபாய் மொய் திட்டம் மூலம், அதற்கான காப்பகத்தை கட்டி வருகிறது.
இது பற்றி அறக்கட்டளை தலைவர் பி.நவீன்குமார்,30, கூறியதாவது: நான், பி.இ., தெர்மல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். கல்லுாரி காலத்திலேயே 'யாசகமற்ற தாயகம்' அமைக்க வேண்டும், என ஆதரவற்றோருக்கான பராமரிப்பு சேவையை துவங்கினேன். கடந்த, 2014ல் அட்சயம் அறக்கட்டளை துவங்கி, மனநலம் பாதித்தோர், முதியோர், ஆதரவற்றவர்கள், குடும்பத்தார் கைவிடப்பட்டவர்கள், நோய் பாதிப்பால் தனிமையானவர்கள், குடும்பத்தை விட்டு வெளியேறியவர்கள், யார் என்றே தெரியாமல் கவலைக்கிடமாக காணப்படுவோர், மறதி ஏற்பட்டோர் என பல தரப்பினரையும் மீட்பு, காப்பகத்துக்குள் கொண்டு வந்தோம்.
கடந்த, கொரோனா காலத்தில் ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து மிகப்பெரிய அளவில் காப்பகம் அமைத்தோம். யாசகர்கள் மறுவாழ்வுக்காக நிரந்தர இடம் தேவை என்ற சூழலால், ஈரோடு, நசியனுார் அருகே, 200 பேர் தங்கும் வகையில் பெரிய அளவில் காப்பகம் கட்டி வருகிறோம்.
இதற்கு தேவையான நிதி இல்லை. எனவே, '101 ரூபாய் மொய்யாக விருப்பம் உள்ளவர்கள் செலுத்துங்கள்' என அழைப்பு விடுத்து, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 15 முதல், 20 சதவீத பணி மட்டுமே நடந்துள்ள நிலையில், மீட்கப்படுவோரை எங்கு சேர்ப்பது, பாதுகாப்பது என்ற பிரச்னை பெரியதாக உள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தாலும், உடனிருக்க ஒருவர் தேவை. 108 ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல, மறுக்கப்படும் நிலை கூட ஏற்படுகிறது. அவர்களுக்கு படுக்கை வசதி தேவை என்பதால் தற்காலிகமாக, ஈரோடு சோலாரில், 40 பேர், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை காப்பகத்தில், 25 பேர், கோபி நகராட்சி மறுவாழ்வு கட்டடத்தில், 15 பேர் என தங்க வைத்து
பராமரிக்கிறோம்.
சொந்த கட்டடம் வரும்போது, ஒரே இடத்தில், 200 பேருக்கு மேல் தங்க வைக்கும் நிலை ஏற்படும். மேலும் விரிவாக்கம் செய்யலாம்.
கடந்த, 10 ஆண்டுகளில், 12,500 பேருக்கு மேல் யாசகர்கள், முதியவர்கள், ஆதரவற்றோர், பெண்கள், குழந்தைகள், நோய் வாய்ப்பட்டோர் என மீட்டுள்ளோம். இவர்களில் 1,270 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளோம். அவர்களை குணப்படுத்தி குடும்பத்தில் சேர்த்துள்ளோம். சுய தொழிலுக்கு மாற்றி உள்ளோம். கர்நாடகாவில் இருந்து தப்பி வந்த மனநிலை பாதித்த, 20 வயது பெண்ணை சமீபத்தில் மீட்டு, அவரது விபரத்தை அறிந்து, குடும்பத்தாரை அழைத்து அனுப்பி வைத்துள்ளோம். அவர்களும் பெண்ணை காணவில்லை என போலீஸில் புகார் செய்து தேடிய நிலையில், குடும்பத்துடன் சேர்த்துள்ளோம். எங்களது ஒவ்வொரு செயல்பாடும் சட்டத்துக்கு உட்பட்டு, போலீஸ், வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை வழிகாட்டுதலுடன் நடப்பதால், நம்பிக்கை ஏற்படுகிறது.
கடந்த, 2018 ல் மத்திய அரசின் தேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்துார், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆகியோரால் விருது பெற்றுள்ளோம். கடந்த, 2019ல் அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., மூலம் விருது பெற்றுள்ளோம். இதுபோல, பல விருதுகள் மத்திய, மாநில அரசால் பெற்றுள்ளோம்.
தவிர, கல்லுாரிகள், மக்கள் அமைப்புகளிடம் சென்று யாசகமற்ற தேசியம் அமைவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூட்டுக்குடும்பம், முதியவர்கள் மீது காட்டும் அக்கறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
காப்பகத்துக்காக 101 ரூபாய் மொய் வழங்கும் திட்டத்துக்கு நிதி வழங்க விரும்புவோர், 99439 08424 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.