ADDED : ஆக 11, 2025 08:13 AM
அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா நாளை மறுதினம் தொடங்கி, 17ம் தேதி வரை நடக்கவுள்ளது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவர்.
மக்கள் மற்றும் சிறுவர்களை கவரும் நோக்கில், பலவித ராட்டினங்கள், துாரி உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெறும். நடப்பாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு, விதவிதமான ராட்சத ராட்டினங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
புதுப்பாளையம் பாலத்திலிருந்து இரு புறங்களிலும், கிருஷ்ணாபுரம் ஐயப்பன் கோவில் வரை, எங்கு பார்த்தாலும், ராட்டினம், கப்பல், மரணக்கிணறு உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுக்கான தளவாட பொருட்கள் கொண்டு வரப்பட்டு 'பிட்டிங்' செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மதியம் காற்றுடன் பெய்த மழைக்கு, 200 மீட்டர் தொலைவுக்கு அமைக்கபட்டிருந்த குதிரை 'ஷெட்' சரிந்தது. அதேசமயம் துாரி அமைக்கப்படும் இடங்களில் மழைநீர் தேங்கி சேறு, சகதியாக காட்சியளிக்கிறது. இந்த இடங்களில் மண் கொட்டி சமன் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மண் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரி, நேற்று சேற்றில் சிக்கியது. டிரைவரால் மீட்க முடியாத நிலையில், ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்டது.
