தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செய்தி்கள் சில வரிகளில்... ஈரோடு

செய்தி்கள் சில வரிகளில்... ஈரோடு

செய்தி்கள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 02, 2024 10:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொ.ம.தே.க., மாநாடு;

பந்தல் அமைக்க பூஜை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், மாநில மாநாடு அடுத்த மாதம், 4ம் தேதி பெருந்துறையில் நடக்கிறது. மாநாட்டுக்கு பந்தல் அமைக்க, விஜயமங்கலம் டோல்கேட் அருகில், நேற்று பூஜை நடந்தது. பொது செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., சின்ராஜ் முன்னிலை வகித்தார். பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசலம் அடிகளார், பூஜை செய்து பந்தல்கால் அமைத்தார். இதில் மாநில பொருளாளர் பாலு, செயலாளர் துரைராஜா, பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநாடு உணவுக்குழு பொறுப்பாளர் பாலு, மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னிமலையில் வேல் வழிபாடு ஜோர்

வேல் வழிபாட்டு குழு சார்பாக, சென்னிமலையில் இருந்து வேல் வழிபாடு, நேற்று காலை தொடங்கியது. மலை கோவில் முன்புறம் கொடிமரத்தின் அருகில் பூஜை செய்து, வழிபாட்டை தொடங்கினர்.

தமிழ்நாடு வேல் வழிபாட்டு குழு சார்பாக, ஜன., 1ம் தேதி சென்னிமலையில் இருந்து பழநி மலைக்கு, வேல் வழிபாடு நடந்த அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி நேற்று சென்னிமலை முருகன் கோவிலில் காலை, 7:40 மணி அளவில், கொடிமரம் அருகில் இருந்து ஆதினங்கள், சிவாச்சாரியார்கள், வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்து, வேல் வழிபாடு தொடங்கியது. மாலையில் பழநி மலை கோவிலில் நிறைவு பெற்றது.

வேல் வழிபாட்டில் ஆதினங்கள் ஸ்ரீமத் சரவண மாணிக்கவாசக சுவாமிகள், சிவலிங்கேஸ்வர சுவாமிகள், காமாட்சி தாச சுவாமிகள், சரோஜினி மாதாஜி, ஸ்ரீவிஜய் சுவாமிஜி, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், இயக்குனர் கங்கை அமரன், நடிகர் ரஞ்சித், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கணவன் சாவில் சந்தேகம்

மனைவி போலீசில் புகார்

அந்தியூர் அருகே மெடக்குறிச்சியானுாரை சேர்ந்தவர் குருசாமி, 52; நசியனுார் தனியார் பார்சல் சர்வீஸ் டிரைவர். இவரின் மனைவி ஆனந்தி, 45; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த குருசாமி, உடல் நிலை சரியில்லை என்று கூறி, அந்தியூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு மயங்கி விழுந்தவரை, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதனிடையே கணவர் சாவில், சந்தேகம் இருப்பதாக, அந்தியூர் போலீசில் ஆனந்தி புகாரளித்துள்ளார். இதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் கொலையில்

3 பேர் சிறையிலடைப்பு

ஜம்பை அருகே துருசாம்பாளையத்தை சேர்ந்த செல்வம் மகன் அய்யன்துரை, 30, கட்டட தொழிலாளி. ஜம்பை பகுதி ஆற்றங்கரையில் இவரை கொலை செய்து, சடலத்தை ஆகாயத்தாமரை செடியில் மறைத்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக அய்யன்துரை நண்பர்களான நான்கு பேரை, பவானி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆற்றங்கரையில் மது குடித்தபோது, கடைசி பெக்கை குடிப்பது யார்? என்பதில் ஏற்பட்ட தகராறில், கொலை செய்யப்பட்டுள்ளார். கல்லை துாக்கிப் போட்டு கொலை செய்த கார்த்திக், அவருக்கு உதவிய வேல்முருகன், பார்த்திபன் என மூவரை, பவானி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு அழைத்து சென்ற சின்னவடமலைபாளையத்தை சேர்ந்த முருகன், சம்பவ இடத்தில் இல்லாததால் அவரை வழக்கில் சேர்க்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

பந்தளராஜா யாத்திரைக்குழு29வது ஆண்டாக பயணம்

புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கின்றனர். நடப்பாண்டு, 29ம் ஆண்டாக இருமுடி கட்டி புறப்பட்டனர். தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் சிலைக்கு முன்பாக, 18 படி அமைத்து, சிறப்பு பூஜை செய்தனர். மொத்தம், 123 பக்தர்கள், நான்கு வாகனங்களில், சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

தேவாலயங்களில் வழிபாடுஆங்கில புத்தாண்டை ஒட்டி, தாராபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தாராபுரம் தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள புனித ஞானப்பிரகாசிரியர் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு கூட்டு பிரார்த்தனை நடந்தது. நேற்று காலை பங்குத்தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனை, கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் உடுமலை சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்திலும், ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தொடங்கியது நெல் அறுவடை

கொள்முதல் நிலையமும் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த ஆக.,ல் தண்ணீர் திறக்கப்பட்டு, ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்றன. இதில் சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது அறுவடை துவங்கி உள்ளது. பெரும்பாலான பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பின் முழு வீச்சில் தொடங்கவுள்ளனர். இருப்பினும், முன்னதாக நடவு செய்யப்பட்ட ஈரோடு உட்பட சில பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது.

அதேசமயம் விவசாயிகள் கோரிக்கைக்கு ஏற்ப நசியனுார், கூகலுார், நாதிபாளையம், அளுக்குழி, கலிங்கியத்தில், அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று தொடங்கப்படுகிறது. இவற்றில், 4ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும். கீழ்பவானி பாசனப்பகுதியில் மொத்தம், 52 கொள்முதல் நிலையங்களை திறக்கவும், தேவை அடிப்படையில் கூடுதல் இடங்களில் திறக்கவும், மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு

காலணி தைக்கும் தொழிலாளிக்கு அழைப்பு

காலணி தைக்கும் மாற்றுத்திறனாளிக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று அளிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோவிலில் வரும், 22ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு, ஹிந்து அமைப்புகள் சார்பில், அழைப்பிதழ் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளியை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளியான சின்னமலை, 62, என்பவருக்கு, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இவர் மாற்றுத்திறனாளியாவர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா, 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் வரை அழைப்பிதழ்களை, வரும், 15ம் தேதிக்குள் வழங்க முடிவு செய்துள்ளோம். அழைப்பிதழ் வழங்கும் பணியில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், ஏ.பி.வி.பி., உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகளும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி பொருட்களை

களவாடிய இளசு கைது

கோபி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கோபி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். பவானி அருகே குருவரெட்டியூரை சேர்ந்த விவேக், 21, என தெரிந்தது. விசாரித்ததில், கோபி அருகே கிருஷ்ணன் வீதியை சேர்ந்த, 70 வயது மூதாட்டி வீட்டில் கடந்த மாதம் புகுந்து, வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. விவேக்கை கைது செய்த போலீசார், திருடிய வெள்ளி குத்துவிளக்கு, பூக்கூடை மற்றும் சொம்பை பறிமுதல் செய்தனர்.

தனித்தேர்வர் விண்ணப்பிக்க அவகாசம்

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்பி, விண்ணப்பித்துள்ளவர்கள், அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய ஜன., 5 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஜன., 5 க்குள், 125 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்கள் (முதல் முறையாக தேர்வு எழுத உள்ளவர்கள், ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி

அறிவியல் பாடத்தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராதவர்கள்) ஜன., 10 வரை சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் பொதுத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபி, டி.என்.பாளையத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பு

மார்கழி மாதம் பிறந்தது முதல், அதிகாலை, 2:00 மணி முதல், காலை 8:00 மணி வரை, கோபி டவுன் மற்றும் புறநகர் பகுதி கிராமங்களில், கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. தேங்காய் எண்ணெய் உறைந்து போகுமளவுக்கு தற்போது அதிகரித்துள்ளது.

மொடச்சூரில் நேற்று உழவர் சந்தைதக்கு, தேங்காய் எண்ணெயை, பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். கடுமையான பனிப்பொழிவால், பாட்டியில் எண்ணெய் உறைந்து விட்டது. இதுபோல் வீடுகளிலும் பாட்டிலில் இருந்த தேங்காய் எண்ணெய் உறைந்தது.

இதேபோல் டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாபுதுார், அரக்கன்கோட்டை, டி.ஜி.புதுார் பகுதிகளிலும் சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

காலை, 9:௦௦ மணி வரை பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரியவிட்டு வாகனத்தை இயக்கி செல்கின்றனர்.

டிராபிக் வார்டன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாநகரிலுள்ள போக்குவரத்து காப்பாளர் அமைப்பில் காலியாக உள்ள தலைமை போக்குவரத்து காப்பாளருக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுயதொழில் செய்பவராகவோ அல்லது வேலை செய்பவராகவோ இருக்கலாம். விண்ணப்பத்தின் போது, 25 முதல், 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டதாரியாக இருத்தல் வேண்டும். எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராகவும் இருத்தல் கூடாது. போக்குவரத்து காப்பாளர் அமைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு தன்னார்வலராகவும் மற்றும் ஊதியர் அல்லாத சேவைகளை வழங்க தயாராகவும் இருத்தல் வேண்டும். எந்த கோர்ட்டிலும் தண்டிக்கப்படாதவராக இருத்தல் வேண்டும். எந்தவொரு பிரிவிலும் அல்லது துணை ராணுவ பிரிவு அல்லது அத்தியாவசிய வேவைகளின் அதிகாரியாகவோ அல்லது கவுரவ பதவியில் இருப்பவராகவோ இருக்க கூடாது. இந்த நிபந்தனைகளுடன் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை தலைமை போக்குவரத்து காப்பாளர், தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பகம், திருப்பூர் மாநகரம், காவல் உதவி கமிஷனர் அலுவலகம் (போக்குவரத்து) அங்கேரிபாளையம் ரோடு, திருப்பூர் - 641603 என்ற முகவரியில் வரும், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us