தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செய்திகள் சில வரிகளில்.. ஈரோடு

செய்திகள் சில வரிகளில்.. ஈரோடு

செய்திகள் சில வரிகளில்.. ஈரோடு


ADDED : பிப் 05, 2024 11:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட கூட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஈரோடு மாவட்ட குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட துணை தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான சின்னசாமி தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் சித்தையன், சண்முகம், ரமேஷ் குமார், மணியன், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொழிலாளர் நல சட்டங்களை குறுக்கி, 4 சட்ட தொகுப்புகளாக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வரும், 16ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம், கிராம அடைப்பு, மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் கூட்டமைப்பு முடிவு செய்யும் இடங்களில் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு செய்தனர்.

கீழ்பவானி பாசனத்துக்கு

௨ம் சுற்று தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கடந்த ஜன., 7ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

முதலாம் சுற்று தண்ணீர், ௧௦ நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் சுற்று தண்ணீர் நேற்று காலை முதல் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2,300 கன அடி வரை நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு, 411 கன அடி நீர் வந்தது. நீர்மட்டம், 78.82 அடி; நீர் இருப்பு, 15 டி.எம்.சி.,யாக இருந்தது.

2ம் நாளாக இளம்பெண் தர்ணாஅந்தியூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 25, சிவில் இன்ஜினியர். இவர் அதே பகுதியை சேர்ந்த, 30 வயதான சிவில் இன்ஜினியரை, ஒன்பது ஆண்டுகளாக காதலித்தார். தனது வீட்டில் காதலை ஏற்காததால், சிவரஞ்சனியை விட்டு அவர் விலகினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, அவரது வீட்டு முன், நேற்று முன்தினம் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இரவு வரை தர்ணா தொடர்ந்த நிலையில், பவானி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் இளவரசி, சிவரஞ்சனி மற்றும் அந்த வாலிபரிடம் விசாரித்தார். இந்நிலையில் வாலிபரை திருமணம் செய்து வைக்கக் கோரி, இரண்டாவது நாளாக நேற்றும், அவர் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

தீயணைப்பு நிலையம் கட்ட4 ஊர்களில் இடம் தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் நான்கு இடங்களில், சொந்தமாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு, இடம் கிடைத்திருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, ஆசனுார், நம்பியூர் என, 11 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் ஆசனுார் நிலையம், வனத்துறைக்கு சொந்தமான, பயன்பாட்டுக்கு உதவாத கட்டடத்தில் செயல்படுகிறது. இந்நிலையில் மொடக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் கட்ட, 60 சென்ட், சென்னிமலையில் ஒரு ஏக்கர், நம்பியூரில், 50 சென்ட், கோபியில், 40 சென்ட் நிலம் கிடைத்துள்ளது. விரைவில் இந்த இடங்களில் சொந்த கட்டடம் கட்டப்படும். பெருந்துறையில் தீயணைப்பு நிலையம் கட்ட, ஏற்கனவே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசனுார் தீயணைப்பு நிலையத்துக்கு, திம்பத்தில் இடம் பார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அ.தி.மு.க., ஆலோசனைஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம், தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. இதில் கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ., ரமணீதரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபி நகர செயலாளர் முத்துரமணன், கோபி அ.தி.மு.க., நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், அனைவருக்கும் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

காற்று மாசு ஏற்படுத்திய ஆலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெருந்துறை சிப்காட்டில் ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து, கடந்த, 2ம் தேதி வெளியேறிய புகையால், கடும் துர்நாற்றம் வீசியதாக, அப்பகுதி மக்கள் கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பினர். இதுகுறித்து சிப்காட்டில் உள்ள தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்க, நேற்று முன்தினம் நேரில் சென்றனர். ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், திங்கள்கிழமையான இன்று, காற்று மாசுபாடு ஏற்படுத்திய ஆலை மீது, சட்ட நடவடிக்கை எடுக்க, மக்கள்

வலியுறுத்தவுள்ளனர்.

ஆப்பரேட்டர் தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் புனித்குமார், 25; வெள்ளகோயில் பகுதியில் ஒரு குவாரியில் ஹிட்டாச்சி ஆப்பரேட்டராக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு விட்டத்தில் துாக்கு போட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. சாவுக்கான காரணம் குறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மொபட் மோதி பெண் பலி

காங்கேயத்தை அடுத்த கோவில்பாளையம் புதுகாலனியை சேர்ந்த பவுல்ராஜ் மனைவி அருக்காணி, 48; கூலி தொழிலாளி. காங்கேயம்-திருப்பூர் சாலையில் நீலக்காட்டுபுதுார் அருகே பெட்ரோல் பங்க் அருகில் நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயம், சிவன்மலை, நீலக்காட்டுபுதுாரை சேர்ந்த சுப்பிரமணி, 40, ஓட்டி வந்த மொபட், அருக்காணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

வனப்பகுதி சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட, பண்ணாரி முதல் திம்பம் வரையில், சாலையின் இருபுறமும் வாகன ஓட்டிகள், பயணிகள், மக்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சத்தி வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் அகற்றும் பணி நடந்தது.

இதில் பல்வேறு தனியார் கல்லுாரிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று காலை முதல் மாலை வரை ஈடுபட்டனர். மொத்தம், 2.50 டன் கழிவு பொருட்களை அகற்றப்பட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

தைப்பூச திருவிழா நிறைவு

சிவன்மலைக்கு எழுந்தருளிய சுவாமி

காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச திருவிழா கடந்த, 26, 27, 28 தேதிகளில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த, 31ம் தேதி பரிவேட்டை, தெப்ப உற்சவம் நடந்தது. இதை தொடர்ந்து தைப்பூச நிறைவு நாளான நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

இதை தொடர்ந்து மாலை, 6:10 மணிக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, தம்பதி சமேத சுப்ரமணிய சுவாமி, பல்லக்கில் மலைக் கோவிலுக்கு எழுந்தருலும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமிக்கு ஆரத்தி எடுத்தும், ஆயிரக்கணக்கான தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். மலைக் கோவிலை அடைந்த பிறகு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. இரவில் கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் தைப்பூச விழா நிறைவு பெற்றது.

காஸ் பங்க் எதிரில் எரிந்த கார்

சென்னிமலையில் பரபரப்பு

சென்னிமலையை அடுத்த பள்ளக்காட்டுபுதுாரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 48; மாருதி 800 காரில் சென்னிமலை - ஈரோடு ரோடு, பெரியார் நகரில் உள்ள பங்குக்கு காஸ் பிடிக்க, நேற்று காலை வந்தார். காஸை நிரப்பிய நிலையில், முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது.

இதைப்பார்த்த பங்க் ஊழியர்கள் விஸ்வநாளிடம் கூறினார். அவரும் வேகமாக காரை விட்டு இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது.

பங்க் அருகே கார் எரிந்ததால் திறமையாக செயல்பட்டு ,விபரீதம் ஏற்படாத வகையில் ஊழியர்கள் காரை சற்று தொலைவில் தள்ளி நிறுத்தினர்.

சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முழுவதும் எரிந்து விட்டது. விஸ்வநாதன் காரை விட்டு இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளுவர் படம் அழிப்பு

பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

சித்தோடு அருகே பேரோடு அரசு துவக்கப்பள்ளி காம்பவுண்ட் சுவரில், பள்ளி நிர்வாகம் சார்பில், திருவள்ளுவர் படம் வரையப்பட்டது.

ஆனால், காவி நிறத்தில் வரையப்பட்டுள்ளதால், படத்தை அழிக்க வேண்டுமென, அப்பகுதியை சேர்ந்த சிலர் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினர். இதனால் நான்கு நாட்களுக்கு முன் அழிக்கப்பட்டது.

இந்த செயலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகம், பவானி போலீசார் மற்றும் அரசை கண்டித்து, பா.ஜ., ஈரோடு மாவட்ட பொது செயலாளர் செந்தில் தலைமையில், சித்தோடு நால்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரகுபதி, மாவட்ட பொது செயலாளர் ராயல் சரவணன், ஒன்றிய பொது செயலாளர் கலைச்செல்வன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us