தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : பிப் 07, 2024 11:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்ட திருத்தத்தை திரும்ப

பெறக்கோரி முறையீடு

ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு வழங்கினர். பொது செயலாளர் கனகராஜ், தலைவர் தனபால், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிர

மணியன், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மனு வழங்கி கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். சட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் போக்குவரத்து எதிர்பாராத விபத்துக்கு, 5 முதல், 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், கிரிமினல் குற்றவாளியாக நடத்தப்படுவர். வாகன பராமரிப்பு, வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் வாகனம் வைத்திருப்போர் பாதிக்கப்படுவர். இத்தொழிலை நம்பி உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.

பட்டு வளர்ப்பு கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டு வளர்ப்பு கருத்தரங்கம் கோபியில் நேற்று நடந்தது. சேலம் மத்திய பட்டு வாரியத்தின் விஞ்ஞானி மற்றும் தலைவர் தாவறீரா பீவி தலைமை வகித்து பேசினார். இதில் ஈரோடு பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் மனீஷா, உதவி இயக்குனர் அப்துல் பாரூக், உதவி இயக்குனர் (ஓய்வு) கிருமி நீக்கம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி,

நுண்ணுாட்ட பயன்பாடு குறித்து பேசினார்.

அமைச்சர் உதயநிதி வருகை;நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு

-ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்துக்கு நாளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி வருகிறார். அன்று, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அரசின் சிறப்பு திட்டம் மூலம், 15,000க்கும் மேற்பட்ட

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியம் உட்பட பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி மூன்றாவது

மண்டல வார்டு கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தின், வார்டுகள் குழு கூட்டம் நேற்று நடந்தது. மண்டல தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். உதவி ஆணையர் சண்முக வடிவு முன்னிலை வகித்தார்.

மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க வேண்டும். துாய்மை பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தார்ச்சாலை புனரமைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. மேயர், துணை மேயர், ஆணையருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 14ல் துவக்கம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, 6,244 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. வரும், 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வரும், 14ம் தேதி காலை துவங்குகிறது.

ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் சிறந்த வல்லுனர்கள் மூலம் பயிற்சி, தினசரி தேர்வு, வாரத்தேர்வு, மாதிரி தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்படும். பங்கேற்க விருப்பம் உள்ளோர், https://forms.gle/67UH546RJWCM5kpm6 என்ற லிங்கில் விபரத்தை பூர்த்தி செய்யலாம். வரும், 14ல் ஆதார் எண், 2 புகைப்படம் போன்ற விபரத்தை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வழங்க வேண்டும்.

ஏ.டி.எம்.,மில் உதவுவதாககூறி ரூ.12 ஆயிரம் திருட்டு

ஈரோடு, மாமரத்துப்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 49, விசைத்தறி தொழிலாளி. கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு சென்றார். பணம் எடுக்க முடியாமல் தடுமாறியபோது, ஒரு ஆசாமி வந்தார். பணம் எடுக்க உதவியும் செய்தார். அதாவது மாரியப்பன் கேட்ட, 1,000 ரூபாயை எடுத்து கொடுத்து சென்றார்.

சில நிமிடங்களில் மாரியப்பன் மொபைல் போனுக்கு, 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்தவர் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று இயந்திரத்தில் கார்டை சொருகினார். ஆனால், அது அவரது கார்டு இல்லை என்பது தெரிந்தது. உதவுவது போல் நடித்த ஆசாமி, அவரது கார்டை மாற்றித்தந்து, பணத்தை அபகரித்தது தெரிய வந்தது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், கில்லாடி ஆசாமியை தேடி வருகின்றனர்.

சத்தி சாலையோர வியாபாரிகள் மனு

சத்தியமங்கலம் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில், சத்தி நகராட்சி கமிஷனர், சேர்மேனிடம் நேற்று மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

சாலையோர வியாபாரிகள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டப்படி நடக்க வேண்டிய நகர வணிகக்குழு தேர்தலை நடத்த வேண்டும். வியாபாரிகள் பயன்படுத்தும் நிலத்தின் அளவுக்கேற்ப வாடகை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். ஏலதாரர்கள் சுங்கம் வசூலிக்க கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுதேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, பர்கூர் மலை வனப்பகுதியில், அந்தியூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்துாரி தலைமையில், போக்குவரத்து போலீசார், சாலை பாதுகாப்பு குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் இரண்டாவது நாளாக நேற்று, தாமரைக்கரை பஸ் நிறுத்தத்தில் மக்களிடையே, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

ரூ.36.53 லட்சத்துக்கு

கொப்பரை விற்பனை

எழுமாத்துாரில், ரூ.36.53 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை நடந்தது.

ஈரோடு மாவட்டம், எழுமாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 990 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 85.60 ரூபாய் முதல், 92.10 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 63 ரூபாய் முதல், 82.99 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

மொத்தம், 45 ஆயிரத்து, 379 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 36 லட்சத்து, 53 ஆயிரத்து, 323 ரூபாய்க்கு விலை போனது.

மாணவி கடத்தல் சம்பவத்தில்

ஆசாமிகளை பிடிக்க தீவிரம்

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த கறிக்கடை தொழிலாளி செல்வராஜ். இவரின், 6 வயது மகள், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, வீட்டுக்கு சென்ற சிறுமியை, பைக் ஆசாமிகள் கடத்தி சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து, செல்வராஜ் வேலை செய்யும் கடை முன் இறக்கி விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நேற்று முன் தினம் காலையிலேயே மர்ம நபர்களை பார்த்ததாக, சிறுமியின் சகோதரன் போலீசில் தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா பதிவுகளை, செல்வராஜ் ,அவரது மனைவியிடம் போலீசார் காட்டியுள்ளனர். அதில் பதிவான ஆசாமிகள் அடையாளம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே செல்வராஜூக்கு தெரிந்த நபர்கள், சிறுமியை கடத்தி செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சிறுமியை கடத்திய ஆசாமிகள், ஓரிரு நாளில் பிடிபடுவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காங்கேயத்தில் போக்குவரத்து

விதிமீறலில் 421 வழக்கு பதிவு

காங்கேயத்தில் போக்குவரத்து போலீசார், நகரின் பல்வேறு பகுதிகளில், அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து அபராதம் வசூலிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் நகரில் நடத்திய வாகன சோதனையில், குடிபோதை வாகன இயக்கம், தலைக்கவசம் அணியாதது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, செல்போன் பேசியபடி ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட பல்வேறு விதிகளை மீறியதாக, 421 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் மூலம் அவர்களிடம், 1.௦௪ லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக, இன்ஸ்பெக்டர் முருகன் தெரிவித்தார்.

தாராபுரம் அருகே வெடிச்சத்தம்தாராபுரம் நகரில் நேற்று காலை, 10: 45 மணியளவில், திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், வீடு மற்றும் தாங்கள் இருந்த இடங்களில் இருந்து வெளியே வந்து வானத்தை பார்த்தனர்.

தாராபுரம் நகர பகுதி மட்டுமின்றி, சுற்று வட்டார கிராமங்களிலும் கேட்டதால், மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொருவரும், தாங்கள் இருந்த இடத்தில் இருந்து, தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து, இங்கு சத்தம் கேட்டது; அங்கு கேட்டதா? என விசாரிக்க துவங்கினர்.

ஆனால், கடைசிவரை, சத்தம் எதனால் ஏற்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை. தாராபுரம் பகுதியில், அடிக்கடி இதுபோல் சத்தம் கேட்பது குறித்து, அதிகாரிகள் விளக்கமளிக்க, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

கோவில் உண்டியலில் ரூ.32 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. மொத்தமுள்ள, 26 உண்டியல்கள் எண்ணப்பட்டதில், 32.52 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் தனியார் கல்லுாரி மாணவியர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

வீட்டில் தவறி விழுந்த

பெயிண்டர் இறந்தார்

டி.என்.பாளையம் அருகே வாணிப்புத்துார், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஞானமாணிக்கம், 52; கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி செல்வி. மகள் ரோச்சல் மோனியா, 22; மகன் பால் ஜெபஸ்டின், 23; இருவரும் முறையே திருச்சி மற்றும் திருச்செங்கோட்டில் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஞானமாணிக்கம், வாசற்படி அருகில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் இறந்து விட்டார். பங்களாபுதுார் போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரூ.50 லட்சம் மதிப்பில்

திட்டப்பணிகள் துவக்கம்

பவானிசாகர் யூனியன் வரப்பாளையம், காவிலிபாளையம் மற்றும் காரப்பாடி ஊராட்சிகளில் வடிகால் கட்டுதல், சாலை அமைத்தல் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கும் திறந்து வைத்தார்.

இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, யூனியன் சேர்மன் சரோஜா, பஞ்., தலைவர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நம்பியூர் அரசு ஆண்கள்

மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின், 2023---24ம் ஆண்டு விழா, தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் தலைமையில் நேற்று நடந்தது. வேமாண்டம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரர், நம்பியூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள், மூத்த ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

வெறுப்பை உமிழும் ஆசிரியர்பிளஸ் ௧ மாணவர்கள் குமுறல்

ஈரோடு, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 கலைப்பிரிவு படிக்கும் மாணவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர். மனு விபரம்: எங்கள் மீது சில ஆசிரியர்கள் வேண்டுமென வெறுப்பை காட்டுகின்றனர். ஆடை, முடி வைத்திருப்பது என ஏதாவது ஒரு காரணம் கூறி, 'பைன்' செலுத்த நிர்பந்திக்கின்றனர். சைக்கிள் பழுது போன்ற காரணத்தால் பஸ்ஸில் வந்தால், அரசு கொடுத்த சைக்கிளை திரும்ப ஒப்படைக்குமாறு கூறுகின்றனர். நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்ற போதிலும், எங்களை அவமரியாதையாக நடத்துகின்றனர். இதனால் மனதளவில் பாதித்துள்ளதால், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்

அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. தி.மு.க. அரசின் சீர்கேடுகளை கண்டித்து, தாராபுரம், பூளவாடி ரோடு பிரிவு, பழைய நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில், அ.தி.மு.க.,வினர் இதில் ஈடுபட்டனர். தலைமை கழக பேச்சாளர் முத்துமணி பேசினார். அ.தி.மு.க., நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

9 கிலோ குட்காவுடன் முதியவர் கைது

வெள்ளகோவில் அருகே நாகமநாயக்கன்பட்டி, வெங்கமேட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி, 78; இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்கள் விற்றுள்ளார். கடையில் சோதனையில் ஈடுபட்ட வெள்ளகோவில் போலீசார், 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

நந்தா கலை கல்லுாரியில்

19வது பட்டமளிப்பு விழா

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார். செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு), பொன் பாண்டியன் கலந்து கொண்டார்.

பாரதியார் பல்கல தர வரிசையில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்ற, முதுகலை இயற்பியல் மாணவி சி.ஆர்.ரவீனா, முதுகலை உயிர் தொழில் நுட்பவியல் மாணவி பி.சங்கவி, இளங்கலை உயிர்தொழில் நுட்பவியல் மாணவன் பி.ஜிதின், இளங்கலை நிர்ம செயலியல் துறை மாணவி எம்.சஹான்ஸ் சுஜி ஆகியோர்; தரவரிசையில் இடம் பெற்ற, 23 மாணவ--மாணவியர் உட்பட இளங்கலை முடித்த, 945 பேர்; முதுகலை முடித்த, 97 பேர் என, 1,042 பேருக்கு பட்டம், பதக்கம் வழங்கி, பொன்பாண்டியன் பேசினார்.

கல்லுாரி முதல்வர் மனோகரன் ஆண்டறிக்கை சமர்பித்தார். முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்லுாரி துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ--மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சீனிவாசன் செய்திருந்தார்.

தொழுநோய் கண்டுபிடிப்பு

முகாம் இன்று முதல் துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் இன்று முதல் வரும், 22 வரை நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (மருத்துவ பணிகள் - தொழுநோய்) ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பவானி, சத்தி, சென்னிமலை தவிர, சித்தோடு, சிறுவலுார், டி.என்.பாளையம், தாளவாடி, அத்தாணி, குருவரெட்டியூர், புளியம்பட்டி, நம்பியூர், திங்களூர், மொடக்குறிச்சி, சிவகிரி ஆகிய, 11 வட்டாரங்களில் தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் நடக்கிறது. இப்பணியில் முன்களப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை செய்வர். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதன் மூலம், முழுமையாக குணப்படுத்தவும், ஊனம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும். மற்றவர்களுக்கு தொழுநோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us