ADDED : ஏப் 02, 2024 04:34 AM
புகார் பெட்டியில்
மனு போட்ட மக்கள்
ஈரோடு: லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, மக்கள் மனுக்களை போட்டுச் செல்லும் வகையில், அலுவலக வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்றாவது வாரமாக நேற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. மனுக்களுடன் வந்த மக்கள், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர். இதன்படி நேற்று, 50க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.
மக்கள் சிந்தனை பேரவைமாநில பொதுக்குழு கூட்டம்
ஈரோடு: மக்கள் சிந்தனை பேரவை மாநில பொதுக்குழு கூட்டம், தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில், ஈரோட்டில் நேற்று நடந்தது.
பேரவையின் வெள்ளி விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் ஈரோட்டில், இரு நாட்கள் மாநில அளவிலான நிகழ்வு நடத்த வேண்டும். மேலும் ஈரோடு புத்தக திருவிழாவின், 20ம் ஆண்டை முன்னிட்டு தனித்தனி மலர் வெளியிடவும் முடிவு செய்தனர். துணை தலைவர் விஜயராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், செயலாளர் அன்பரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பண்ணாரி கோவிலில்மறுபூஜை விழா ஜோர்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மாதம், 26ம் தேதி நடந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.
இந்நிலையில் மறு பூஜை விழா நேற்று நடந்தது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். குண்டத்தில் உப்பு, மிளகு, துாவி வழி பட்டனர். பலர் நேர்த்திக்கடனாக மொட்டை போட்டுக் கொண்டனர். மறு பூஜையை ஒட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இத்துடன் நடப்பாண்டு குண்டம் விழா நிறைவடைந்தது.
வாய்க்காலில் மாயமானஅர்ச்சகர் சடலமாக மீட்பு
புன்செய்புளியம்பட்டி-
கோவை, கோபாலபுரத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் மனோஜ், 31; மனைவி மற்றும் குடும்பத்தினருடன், பண்ணாரி அம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் காரில் வந்தார். தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் வழியில், பவானிசாகர்-மேட்டுப்பாளையம் சாலையில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது மாயமானார். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், இரவானதால் அப்பணி கைவிடப்பட்டது. நேற்று காலை தேடும் பணி துவங்கியது. தொப்பம்பாளையத்தில் கரையோரம் மனோஜின் சடலம் ஒதுங்கியது. பவானிசாகர் போலீசார் மீட்டு, சத்தி அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.
பூத் சிலிப் வழங்கியகலெக்டர், கமிஷனர்
ஈரோடு: தேர்தல் கமிஷனர் சார்பில், தமிழகம் முழுவதும், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் மற்றும் ஒரு குடும்பத்துக்கு ஒரு வாக்காளர் கையேடு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதன்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன் சத்திரம், பாரதி நகர் பகுதியில், கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா வழங்கினார். வரும், 19ம் தேதி தவறாமல் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி, 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர். பிறகு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுச்சாவடி மையத்தை பார்வையிட்டனர்.

