ADDED : மே 02, 2025 02:03 AM
சத்தியமங்கலம்,மே 2
கடம்பூரை அடுத்துள்ள குன்றி மலைகிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம்
ஆர்.சி., உயர்நிலை பள்ளியில் நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசுகையில், '' இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள, 225 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. இப்பகுதியில் வரும் 9 ம்தேதியன்று தாசில்தார் மூலம் பிறப்பு சான்றிதழ், புதிய ஆதார் அட்டை , திருத்தம், நீக்கம், வனஉரிமை சட்டத்தின் படி நிலம் வைத்திருப்போருக்கு பட்டா மாறுதல், வாரிசு சான்று ஆகிய சேவைகளை வழங்கப்படும். அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து கலெக்டரிடம், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை கொடுத்தனர்.
*சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை, வடமுகம் வெள்ளோடு , குமராவலசு, ஈங்கூர், முருங்கத்தொழுவு, எக்கட்டாம்பாளையம், குப்பிச்சி
பாளையம், பனியம்பள்ளி, கொடுமணல், பசுவபட்டி, உள்ளிட்ட, 22 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடத்தது. கூட்டத்தில், அடிப்படை வசதிகள், குடிநீர் தட்டுப்பாடு போக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*அந்தியூர் அடுத்த பர்கூர் பஞ்சாயத்து சார்பில், பர்கூர் உறைவிடப்பள்ளியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நேற்று கிராம சபைக்கூட்டம் நடந்தது. கட்டட அனுமதி, சுய சான்று, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.